ஈஃபில் கோபுரத்தை தாக்கிய பிரம்மாண்ட மின்னல்!; சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏற்பட்ட தீவிர ஆலங்கட்டி மழையின் போது, உலகப் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தின் உச்சியை மின்னல் தாக்கிய காட்சிகள் வேகமாகப் பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவிய நிலையில், வானிலை மாற்றத்தால் நேற்று இரவு பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.
ஈஃபில் கோபுரத்தின் உச்சி
இந்தப் புயலின் போது, ஈஃபில் கோபுரத்தின் உச்சியை மின்னல் தாக்கிய தருணத்தை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது கேமராக்களில் பதிவு செய்துள்ளனர்.
அந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மின்னல் தாக்கிய போதிலும், ஈஃபில் கோபுரத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் விளக்குகையில், ஈஃபில் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மின்னல் கடத்தி அமைப்பு (Lightning Rod) மற்றும் அதன் இரும்புக் கட்டமைப்பு, மின்னலின் மின்சாரத்தை பாதுகாப்பாக தரைக்குக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கனமழை
ஈஃபில் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, அதன் உயரம் காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 5 முதல் 10 முறை வரை மின்னல் தாக்குவது வழக்கமான நிகழ்வாகும்.
இதற்கிடையில், பாரிஸ் மட்டுமின்றி சீன்-எட்-மார்ன், வெர்சாய்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று தொடரும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![]()