காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!…. கவிதை… ஜெயராமசர்மா

தாத்தா என்பது தனித்துவம் மிக்கது
தலைமை தாங்கும் வலிமை கொண்டது
அன்பொடு அறிவு அனுபவம் நிறைந்த
பொக்கிஷம் தாத்தா என்பதே சத்தியம்
பாட்டி என்றால் பரிவு பக்குவம்
பாட்டி என்றால் பகிர்ந்திடும் தத்துவம்
பண்பின் வடிவம் பாசத்தின் சிகரம்
பாட்டி என்னும் பசுந்தமிழ்ப் பதமே
தாத்தா கடுமை தண்டிப்ப தல்ல
தடுமாறி விழாமல் தடுத்திடும் காப்பே
ஒவ்வொரு சொல்லும் உள்ளம் திருந்த
உரைத்திடும் தாத்தா உயர் பாடமாகும்
காவல் தெய்வமாய் தாத்தா இருப்பார்
கண்ணியம் இழக்கா காத்திடும் காவலர்
மண்ணிலே தாத்தா வரமாய் இருக்கிறார்
கண்ணெனத் தாத்தாவை எண்ணிடல் வேண்டும்
வீட்டில் பாட்டி இருப்பது சிறப்பே
காட்டிக் கொடுக்கா காத்துமே நிற்பார்
வாட்டும் நோய்க்கு மருத்து கொடுக்கும்
மருத்துவர் ஆகவும் மாறுவார் பாட்டி
பற்பல கதைகளைப் பாங்காய் சொல்வார்
தத்துவம் சத்தியம் நிறைந்துமே இருக்கும்
விளங்கா அனைத்தும் விளங்கும் வகையில்
பாட்டியின் கதைகள் பாடம் நடத்தும்
தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால்
காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்
காத்திடும் தெய்வம் வீட்டிலே இருந்தால்
கவலைகள் அகலும் களிப்பே பெருகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()