பலதும் பத்தும்

போர் பதற்றம் தொழில்துறையை தாக்கியது; ஆணுறை உற்பத்தித் துறைக்கு புதிய சிக்கல்

நீடித்து வரும் போர் பதற்றங்கள், எதிர்பாராத விதமாக இந்தியாவின் ஆணுறை (Condom) உற்பத்தித் துறையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மசகு எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக 860 மில்லியன் டொலர் பெறுமதியான இத்துறை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவின் ஆணுறை உற்பத்தித் துறை ஆண்டுக்கு 400 கோடிக்கும் அதிகமான அலகுகளை உற்பத்தி செய்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழலால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிலிக்கோன் எண்ணெய் (Silicone oil) மற்றும் அம்மோனியா (Ammonia) ஆகியவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரப்பர் பாலை (Latex) நிலைப்படுத்துவதற்கு அவசியமான அம்மோனியாவின் விலை 40% முதல் 50% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோகெமிக்கல் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களான PVC ஃபோயில், அலுமினியம் ஃபோயில் ஆகியவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 அன்று நடந்த அமைச்சுகளுக்கிடையிலான சந்திப்பில், முன்னுரிமை வாய்ந்த துறைகளைப் பாதுகாக்க பெட்ரோகெமிக்கல் அலகுகளுக்கான வள ஒதுக்கீட்டை 35 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது ஆணுறை உற்பத்தியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த விநியோக சங்கிலி அதிர்ச்சியால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

இது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ரீதியிலான ஒரு அபாயமும் கூட என இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, இந்தியா அதிக அளவிலான உற்பத்தியையும் குறைந்த இலாபத்தையும் கொண்ட ஒரு சந்தையாகும்.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் ஆணுறை விலையை மலிவாக வைத்திருப்பதே இதன் நோக்கமாகும். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது விற்பனை அளவைக் குறைக்கும்.

இது நீண்டகால அடிப்படையில் நாட்டின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *