இலங்கை

காலக்கெடுவிற்கு முன்னதாகவே திறனை இரட்டிப்பாக்கும் அதானி தலைமையிலான இலங்கை கொள்கலன் முனையம்

அமெரிக்க நிதியில் $553 மில்லியன் கைவிட்ட போதிலும், இந்தியாவின் அதானி குழுமமும் அதன் பங்காளிகளும் கொழும்பில் உள்ள $840 மில்லியன் கொள்கலன் முனையத்தின் திறனை திட்டமிட்ட மாதங்களுக்கு முன்பே இரட்டிப்பாக்க உள்ளனர்.

பங்காளி நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாகி ஒருவர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் ஆழமான மேற்கு சர்வதேச முனையம், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான இந்தியப் பெருங்கடல் செல்வாக்கிற்கான இழுபறிப் போரில் இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முழு தானியங்கி முனையத்தின் முதல் கட்டத்தை அதானி நிறுவனம் ஏப்ரல் மாதம் திறந்து வைத்து, அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

முனையத்தின் இரண்டாவது மற்றும் இறுதி கட்டம் நடந்து வருகிறது.

முனையத்தின் இரண்டாவது கட்டம் 2027 பெப்ரவரி காலக்கெடுவிற்கு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்னதாக அதாவது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என்று ஜான் கீல்ஸின் போக்குவரத்துத் தலைவர் ஜாஃபிர் ஹாஷிம் கூறினார்.

இலங்கையின் ஆழமான நிதி நெருக்கடியின் விளைவாக, நாட்டில் வெளிநாட்டு முதலீடு கிட்டத்தட்ட ஸ்தம்பிதமடைந்ததை அடுத்து, முன்னர் அறிவிக்கப்படாத துரிதப்படுத்தப்பட்ட காலக்கெடு எதிர்பாராதது.

இறுதி கட்டம் முடிந்ததும், முனையம் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்று ஹாஷிம் கூறினார்.

இது கொழும்பு துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும்.

இந்த முனையம் வழியாகப் பாயும் வணிகத்தின் மிகப்பெரிய பகுதி இந்தியாவில் இருந்து தொடங்குகிறது.

கடந்த டிசம்பரில், அதானி நிறுவனம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து தனது நிதி கோரிக்கையை மீளப் பெற்றது, உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் திட்டத்திற்கு நிதியளிக்கத் தேர்வுசெய்தது.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிறர் இலஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது – குற்றச்சாட்டுகளை குழு ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளது.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், முனையத்தில் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, ஜோன் கீல்ஸ் 34 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது, மீதமுள்ள பங்குகளை இலங்கை துறைமுக ஆணையம் வைத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதானியிடமிருந்து மேலும் முதலீடுகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம், கடந்த பெப்ரவரியில் மின் கொள்முதல் விகிதத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதை அடுத்து, அதானி $1 பில்லியன் மதிப்புள்ள இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button