எலும்புக் கூடுகள் தொடர்பாக யாழ்.பல்கலையில் டி.என்.ஏ. பரிசோதனை வேண்டாம்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் ஆய்வு கூடத்தில் செய்யலாம் என்ற கோரிக்கையை தாம் நிராகரித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், புதிய ஆய்வு கூடத்தில் முதன்முதலில் செய்யப்படுகிற பரிசோதனையாக இது இருப்பது உசிதமல்ல என்ற விடயத்தை மன்றுக்கு தெரிவித்தேன் – என்றார்.
செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழியில் எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அந்த ஆய்வுக்கூடங்களிலே, பல்கலைக்கழகங்களிலே இதை செய்ய போகிறவர்கள் இப்பொழுதிருந்தே மேற்பார்வை செய்ய வேண்டும். ஏனென்றால் யாருடைய கட்டுக்காவலில் இந்த சான்றுப் பொருட்கள் கைமாறுகிறது என்பது மிக முக்கியமான ஒரு விடயம். அதையும் செய்ய வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கைக்கு, நீதிவான் இதை ஆராய்ந்து எந்தெந்த
பல்கலைக்கழகங்களக ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்ப முடியும் என்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டு கொண்டிருப்பதாகவும் அதற்கு தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்து விட்டது என்றும் வெகு விரைவில் தங்களாலேயே இதனை செய்ய முடியும் என சட்ட வைத்திய அதிகாரி கூறியிருந்தார். முதன்முதலில் செய்யப்படுகிற பரிசோதனை இந்த பரிசோதனையாக இருப்பது உசிதமல்ல என்ற விடயத்தை மன்றுக்கு நான் தெரியப்படுத்தியிருக்கிறேன்.
தெளிவாக இந்த விடயங்களிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் அனுபவம் உள்ள ஆய்வுக்கூடம், பல்கலைக்கழகம் இதனை செய்ய வேண்டும் என்பதை நான் முன் வைத்திருக்கிறேன். அது குறித்த தீர்மானம் பின்னர் எடுக்கப்படும்.
இதேவேளை இங்கே இருக்கிற அதிகாரிகளுக்கு நிபுணத்துவம் இல்லை என்று போலியான செய்திகள் ஊடகங்கள் மூலமாக பரப்பப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்த நிலையில்
அது தொடர்பான விடயத்தையும் முறைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுக்க பணிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் அகழ்வு பணிகளிலேயே நிபுணத்துவம் இருந்தாலும் அடையாளப்படுத்தலையே இந்த நாட்டிலே நிபுணத்துவம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்கிற சமர்ப்பணத்தை நான் செய்தேன்.
அதற்கு சான்றாக மன்னர் மாத்தளை போன்ற விடயங்களிலும் சான்று பொருட்கள் வெளியில் அனுப்பப்பட்டதை சொன்னேன்.
செம்மணியில் 1999ம் ஆண்டு அகழ்ந்த்தெடுக்கப்பட்ட 15 எலும்பு கூட்டுத் தொகுதிகளின் போது எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் முதலிலேயே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கே அதற்கான நிபுணத்துவம் இல்லை என கொண்டுவரப்பட்டு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு அந்த சான்றுப் பொருட்கள் லங்காசெயர் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக தாங்கள் அறிகிறோம் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தோம் – என்றார்.
![]()