கவிதைகள்

ஆண்டவனே வழிகாட்டு!… கவிதை… ஜெயராமசர்மா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா 
image0.jpeg

அதிகாரம் என்றும் ஆகாது உடலுக்கு
அதிகாரம் உலக அழிவுக்கு வித்தே
இதிகாசம் புராணம் எடுத்துமே சொன்னது
எதையுமே கேளா எழுந்தது அதிகாரம்
 
அதிகாரம் அரச கட்டிலில் அமர்கிறது
எதையுமே பாரா எக்காள மிடுகிறது
ஊதிப் பெருக்க ஒன்றாக இணையும்
பாதகர் பலரும் பக்கமாய் வருகின்றார்
 
நீதியை மிதிக்கின்றார் நிட்டூரம் செய்கிறார்
போதனை போதனை பொய்யாய் விரிக்கிறார்
பாதகத்தை செய்ய பக்குவமாய் சொல்கிறார்
பாரிருப்பா ரெல்லாம்  பதறித் துடிக்கின்றார் 
 
அநியாயம் அங்கே அதிரசமாய் ஆகிறது
ஆலவட்டம் பிடிப்பார் அகமகிழ்ந்து நிற்கின்றார்
அதிகார அரக்கன் அஹிம்சையை மறந்து
அதிகார வெறியால் ஆடியே நிற்கின்றான்
 
காவலர்க ளெல்லாம் கடிநாயாய் மாறுகிறார்
கடித்துக் குதறி கடுவிஷமாய் ஆகின்றார்
நீதிமான்கள் யாவருமே நினைவிழந்து நிற்கின்றார்
அதிகாரம் அங்கே அதிர்ந்துமே சிரிக்கிறது
 
வள்ளுவர் கண்ணீர் கடலினுள் மூழ்கின்றார்
வள்ளலார் மனமொடிந்து வாடியே நிற்கின்றார்
தெள்ளுதமிழ் பாரதியார் உள்ளம் ஒடிகின்றார்
தேசபிதா காந்திமகான் தனைமறந்து அழுகின்றார்
 
அறமுடையார் அனைவருமே ஆண்டவனை நாடுகிறார்
அவலங்கள் போக்கிடவே அனைவருமே வேண்டுகிறார்
அமைதியொடு அன்புயர அதிகார வெறியழிய 
அனைத்துமாய் இருப்பவனே ஆண்டவனே வழிகாட்டு 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *