உலகம்

இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மீது இந்திய இராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய இராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன.

இந்த மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

காஷ்மீரின் ஜம்மு விமானப்படைத் தளம், பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளம், ராஜஸ்தானில் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானத் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.

இதில் பெரும்பாலான ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. மேலும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட், கோட்லி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன.

இந்த பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள், விமானப் படை தளங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தங்கை ஆலிமா கான் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. ஆனால் இந்திய ராணுவத்தின் ட்ரோன்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி வரை எளிதாக வந்து தாக்குதல் நடத்தி உள்ளன. பாகிஸ்தான் ராணுவம் மிகவும் பலவீனமாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இந்திய ராணுவ ட்ரோன்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசரநிலை அமுல் செய்யப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் விமானி கைது: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நேற்று இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button