இலங்கை

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

வியாழக்கிழமை வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர், குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளனர்.

மேலும்> டுபாயில் இடம்பெறுகின்ற உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார். அத்துடன் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ளும் ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளில் கலந்துக்கொள்வார். தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளுடனான ஒத்துழைப்புகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.

குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான சுமார் 12 ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட உள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் ஒரு கூட்டு ஆணைக்குழுவை உருவாக்குவது இந்த விஜயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். இலங்கை தேயிலை மற்றும் மாணிக்க கற்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளிட்ட அந்நாட்டின் வலுசக்தி மற்றும் பொருளாதார துறை அமைச்சர்களை சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாட உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை ஒரு எரிசக்தி மையமாக நிறுவுவது குறித்த ஆரம்ப பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்களுடன் அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள சீனாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான திட்டத்தையும் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புவியியல் இருப்பிடம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் நன்மைகளை கருத்தில் கொண்டு, பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்ற முடியும் என்பது இலங்கையின் நீண்டகால திட்டமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. மறுபுறம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்களுடன் தற்போதைய அரசாங்கம் அண்மையில் பேச்சுவார்த்தைளை முன்னெடுத்திருந்தது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்ததைகளின் போது மூன்று நாடுகளிடமிருந்து ஆரோக்கியமான பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், விரிவான விவாதங்களுக்காக அந்த நாடுகளின் தொழில்துறை துறை பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் கெரவலப்பிட்டியை தளமாகக் கொண்ட கொழும்பில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்டத்தை தொடங்க கத்தார் தூதர் ஒப்புக்கொண்டுள்ளார். இது கொழும்பில் உள்ள களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் உள்ள வெப்ப மின் நிலையங்களை குறுகிய காலத்திற்குள் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவாக மாற்றும் திட்டத்துடன் ஒத்துப்போகிறது.

மின்சாரத் துறையில் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை அனைத்து வெப்ப மின் நிலையங்களையும் குறைந்த விலை திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவாக மாற்றுவதாகும். மின்சார கட்டணங்களைக் குறைப்பதற்கான வழிமுறையாக இது தேசிய மக்கள் சக்தி கொள்கை பிரகடனத்தில் ஒரு முக்கிய அம்சமாகவும் இருக்கிறது.

நீண்ட கால ஒப்பந்தங்களுடன் மற்றும் எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதர்களுடன் கலந்துரையாடப்பட்டது. சபுகஸ்கந்தாவில் மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பெற்றோலியத் துறை மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியாவும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை – இந்தியன் எரிபொருள் நிறுவனம் இடையேயான கூட்டு முயற்சியான திருகோணமலை பெற்றோலியம் கேந்திர நிலையம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான கோரிக்கைகள் காணப்படுகின்றன.

இந்த திட்டம் இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்ட திருகோணமலையில் உள்ள 61 எண்ணெய் தொட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த கூட்டு முயற்சியின் 51 சதவீத பங்குகளை வைத்திருக்க இலங்கை ஆர்வம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட ஒரு சர்வதேச எண்ணெய் சேமிப்பு வசதியாகவும் இருக்கும். இவ்வாறானதொரு புறசூழலிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button