இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல் – பா.ஜ.கவின் வெற்றி உறுதி

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.

இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. இதனால் 27 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் பா.ஜ.க. முன்னிலை வகித்தது. அதன்பின் ஆம் ஆத்மி முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தது.

இருப்பினும் மதியம் நிலவரத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 46 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் இதுவரை ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களை பா.ஜ.க. பெறும் நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி மாலை 7 மணி அளவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட டெல்லியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியான நிலையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பர்வேஷ் வர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷாகித் சிங் ஷர்மாவின் மகன் ஆவார். மேலும் மேற்கு டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *