கல்கி விமர்சனம்…பாகுபலியை மிஞ்சியதா?: 5 நிமிட காட்சியில் கண்களினால் மிரட்டிய கமல்
யுத்தத்துடன் ஆரம்பிக்கும் கல்கி திரைப்படம் மகாபாரதத்தில் தொடங்கி கலியுகம் வரை பிரம்மாண்டமாக செல்கிறது.
இப்படியொரு பிரம்மாண்டமான கதையை இன்னும் எத்தனை பாகங்களாக படமாக்கி நாக் அஸ்வின் முடிப்பார் என்பதே மிகப்பெரிய கேள்வியாகத்தான் இருக்கிறது.
பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது கல்கி படத்தின் கதை.
உலகத்தின் முதலும் கடைசியுமான நகரமாக மிஞ்சியிருக்கிறது காசி.

மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன் ) கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள்.
ஒருபக்கம் கங்கை நதி வற்றி கடவுள்களை கைவிட்டு பஞ்சத்திலும் பசியிலும் வாழ்கிறார்கள் மக்கள்.
மறுபக்கம் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான ’காம்பிளக்ஸ்’ என்கிற தங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் தனி உலகில் வாழ்கிறார்கள்.
எப்படியாவது இந்த சூழலில் தேவையான பணத்தை சேர்த்து தானும் செளகரியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் (பிரபாஸ்) ஒரே கனவு.
சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கியாக பிறக்க இருக்கும் குழந்தைதான்.

இந்தக் குழந்தையை சுமக்கிறார் சுமதி ( தீபிகா படுகோன்). எப்படியாவது இந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று யாஸ்கின் துடிக்கிறார்.
அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). இந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் வழியாக தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள பைரவா நினைக்கிறார்.
அஸ்வத்தமா தனது சாபத்தில் இருந்து மீண்டாரா? சுப்ரீம் யாஸ்கினின் பிராஜெக்ட் கே திட்டம் என்ன ? பைரவா தனது ஆசையை நிறைவேற்றினாரா என்பதே கல்கி படத்தின் கதை.

கல்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் ஸ்ச்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் தான்.
இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் வகைமையோடு இணைத்து நம்பகத்தன்மையான ஒரு திரைக்கதையை இயக்குநர் நாக் அஸ்வின் உருவாக்கியிருக்கிறார்.
மேலும், பிரபாஸ் ஓட்டும் வாகனமான புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது, மிருணால் தாக்கூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமெளலி என படத்தில் சின்ன சின்னதாக நிறைய சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் வரும் குருக்ஷேத்திர போர் காட்சிகள் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை அசாத்தியமான ஒரு உலகத்தை நம் கண் முன்னாள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் ப்ரோடக்ஷன் டிசைனர் நிதின் ஜிகானி மற்றும் ஒளிப்பதிவாளர் Djordje Stojiljkovic இருவரும் தங்கள் அசாத்திய உழைப்பால் இயக்குநர் நாக் அஸ்வினின் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமையாக இருக்கிறது.
முதல் பாகத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் மனதின் பதியும்படியான கதாபாத்திரம் என்றால் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தினை சொல்லலாம்.
ஆக்ஷன் காட்சிகளில் பிரபாஸ் நம்மை எங்கேஜ் செய்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரம் நகைச்சுவைத் தன்மை கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபாஸின் கதாபாத்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.
இரண்டே காட்சிகளில் மட்டுமே நாம் கமல்ஹாசனை பார்க்கிறோம்.
ஆனால் கமலின் கண்களை மட்டும் பார்தே ஒட்டுமொத்த திரையரங்கும் அதிர்கிறது.
அதில் வெறும் இரண்டு கண்களையும் குரலையும் வைத்தே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்.
இரண்டாம் பாதியில் கமலின் காட்சிகள் மிரளவைக்கும் என்று நிச்சயம் சொல்லலாம்.

மொத்தத்தில் ஹொலிவுட்டில் ஹாரிபாட்டர் படங்கள், அவெஞ்சர் படங்களை பல பாகங்களாக பார்த்தது போல இந்த படத்தையும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.
கல்கி அவதாரம் எப்போது வரும் கல்கியாக யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பும் எகிறி இருக்கின்றது.
![]()