இந்தியா

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட தடையை நீக்க வேண்டும். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 6 மாதத்திற்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும். எம்.எல்.ஏக்கள் இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே, 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தலுக்கு தடை கோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button