தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர்.

இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது.

பேரினவாத ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சக்திகள் பேராதரவோடு 2009 இல் இனப்படுகொலையை அரங்கேற்றி கொண்டிருக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரியோர் முதல் சிறுவர் வரை சதை பிண்டங்களாக இரத்த வெள்ளத்திலும் கொல்லப்பட்டும் காயங்களோடும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பக்கம் மக்கள் பட்டினியோடு வெறும் உப்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்த பேரவலத்தை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது.

இவ் வரலாற்று பேரவலத்தினை நினைவு கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும்  கடந்த 15 வருட காலமாக தமிழர் தாயகம் எங்கும் முடிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கஞ்சி பகிர்வதோடு மே 18ஆம் திகதி நினைவேந்தல் நடத்தப்படுகின்றது.

உப்பு கஞ்சி மக்களின் நீதிக்கான குரலின்  அடையாளமும், ஆயுதமும் ஆகும். இதற்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் நீதியை மடக்கி தம் பக்கம் சாய்ப்பதும் தமிழர்களின் நீதியின் ஆயுதமான கஞ்சியை தட்டிப்பறித்து நீதி குரலை அடக்க நினைப்பது அராஜகமாகும். சம்பூர் பொலிஸார் பெற்றிருக்கும் நீதிமன்ற தடையுத்தரவை மீளப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் அவர்களையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறுகின்றோம். இத்தகைய கைதுகள்  நீதியை தடுத்து விட முடியாது என்பதையும் உறுதியாக கூறுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே. இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதி குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 வது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button