தாய்லாந்து சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ்ப்பாண வீரர்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான Ratnam Rossy Harinth, அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி, எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணியின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.

சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், சென்செய் (Sensei) ஆகவும் விளங்குவதுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் JKS கராத்தே பாடசாலைகளின் ஊடாக 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார்.
கல்வியிலும் தொழில்துறையிலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ள இவர், தனக்குப் பிடித்த கராத்தே துறையிலும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு, அத்துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். கல்வி, தொழில் மற்றும் தனக்குப் பிடித்த துறை என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்கவுள்ள இவரது பயணம் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுத்தர அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
![]()