ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்

தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது.
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த மக்கள் எழுச்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையவழியில் உரையாற்றவுள்ள நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் இந்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
அரசின் ஆதரவு இல்லை
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், “இந்த நிகழ்வை இந்திய அரசு ஏற்பாடு செய்யவோ ஆதரிக்கவோ இல்லை.

இது தனியார் ஊடக நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும். அங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு அரசின் ஆதரவு இல்லை” எனக் கூறியுள்ளதாக இந்திய தரப்புகள் விளக்கியுள்ளன.
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அரசு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் புதுடெல்லியில் சுய விருப்ப நாடுகடத்தல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டு, போராட்டங்களை அடக்கிய விதம் தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை அவர் சட்டரீதியாக செல்லுபடியாகாதது என நிராகரித்துள்ளார்.
78 வயதான ஷேக் ஹசீனா, டாக்காவை விட்டு வெளியேறிய பின்னர் முதன்முறையாக புதன்கிழமை காணொளி வாயிலாக பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார்.
தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சி
தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents’ Club of South Asia) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் அவரது மகன் சஜீப் வாசெட் ஜோயும், பல்வேறு பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் திட்டமிடப்பட்ட உரை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குமாறு பங்களாதேஷ் அரசு கோரியிருந்தது.
மேலும், தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் இந்திய மண்ணைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது இருநாட்டு உறவுகளை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் எம். ஹுமாயூன் கபீர், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வ எதிர்ப்பை வெளியிட்டார்.
“தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், குறிப்பாக தப்பியோடியுள்ள ஷேக் ஹசீனா, இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
![]()