“இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக” – சீமான்

இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக, வேடிக்கை பார்த்தது அதிமுக, பாஜக என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்தூர், பர்கூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ”வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இருந்து பெண்களை விசாரணை என அழைத்து சென்று கர்நாடகா மாநில போலீஸார் சித்ரவதை செய்திருக்க முடியுமா? வீரப்பன் காட்டிற்குள் இருக்குபோது சொல்கிறார், ஒரு நாள் நான் காட்டில் இருந்து வெளியே வந்து தேர்தலில் நிற்பேன், என் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நானும் ஒரு நாள் அதிகாரத்திற்கு வருவேன் என தெரிவித்தார். அவர் வரவில்லை. ஆனால் அவரது அரசியல் வாரிசாக வித்யாராணியை களத்தில் நிற்க வைத்துள்ளேன்.

காட்டை காத்த மாவீரனின் மகள், இந்த நாட்டை காக்க போராடுவாள் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன். காட்டில் வீரப்பன் சந்தன மரங்களை வெட்டி விற்றார், யானை தந்தங்களை விற்றார் என குற்றம்சாட்டியவர்களிடம் நான் கேட்ட கேள்வி ஒன்று தான். விற்றவர் காட்டிற்குள்ளே இருக்கிறார், வாங்கியவர் எங்கே இருக்கிறார்?

நாட்டுக்குள் நாட்டை ஆளபவர்கள் சாராயம் ஆலை வைத்து காய்ச்சி விற்கும் போது, காட்டிற்குள் வீரப்பன், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தாரா? மாளிகைகள் கட்டினாரா? வீரப்பனை திருடன், மாயாவி என பட்டம் சுமத்துகிறீர்கள், அப்படி என்றால் ஜெயலலிதா, கருணாநிதிக்கு என்ன பெயர் வைப்பீர்கள்? காட்டிற்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவை கடத்தினர். அவர் நினைந்திருந்தால் நமீதாவை கடத்திருக்க முடியாதா?

தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்ந்த மறவர்கள். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகாவில் கூறுகிறார்கள். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் என்ன முட்டாள்களா என கேட்கின்றனர். ஒரு நொடி நினைத்து பாருங்கள், காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா? ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என கூற முடியுமா?

வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்பதற்காக, திட்டமிட்டு அழித்தார்கள். இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக. வேடிக்கை பார்த்தது அதிமுக, பாஜக. கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ். மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜக. அவர்களுக்கு வாக்களிக்க போறீர்களா?

எனது சின்னத்தை எடுத்து கொண்டு ஆட்டம் காட்டுவது, எனது சின்னத்திற்கு அருகில் பழைய விவசாய சின்னத்தை வைப்பது. இதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒரு ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்து தான் கட்சியை ஆரம்பித்தேன்” என்று சீமான் அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button