நாவல்கள்

காதலர் விமானம்!… (தொடர்:14) ஏலையா க.முருகதாசன்.

சச்சிதானந்தம் வீட்டுக் கலகலப்புப் போய் நிசப்தம் நிலவியது.நிசப்தத்தை கலைத்த சந்திரன் ‘ அம்மா உன்மீது சத்தியமாய்ச் சொல்றன் நான் ஒரு கடிதமுமே அவளுக்கு குடுக்கவில்லை.அவள் ஏன் இப்படி பொய் சொல்றாள் என்று எனக்கும் விளங்கேலையம்மா’ என்கிறான்.

சிவகாமி எதுவுமே பேசாமல் சுவரோடு சாய்ந்து மேலே பார்த்தபடி இருக்கிறாள்.தனது தோழி எதற்காக இப்படிப் பொய் சொல்கிறாள் என நினைத்தாளோ என்னவோ அவளின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது.

அதைக் கவனித்த தங்கம்மா’ நீ ஏண்டி அழுகிறாய், அர்ச்சணாவிற்கு கிஸ்ரீரியா வாய்வாக்கும்’ என்கிறாள்.

தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்த சச்சிதானந்தம் எப்பொழுதும் கலகலப்பாகவிருக்கும் வீடு அமைதியாகவிருப்பதும் எவருமே எதுவுமே பேசாமலிருப்பதையும் கவனித்த போதும் அதுபற்றி யாரிடமுமே கேட்காது முகம் கைகால் கழுவுவதற்காக கிணத்தடிப் பக்கம் போகிறார்.

அன்றிரவு கணவனுக்கு அர்ச்சணா சொன்ன அத்தனையையும் மகேஸ்வரி சொல்லிவிடுகிறாள்.எல்லாவற்றையும் மூடிமறைத்து வைத்திருந்துவிட்டு நாளைக்கு அது பெரும்பிரச்சனையாக வருவதற்கு முன்னர் கணவரிடம் சொன்னால் அதற்கு அவர் ஏதாவது தீர்வு காண்பார் என்ற எண்ணமே மகேஸ்வரி சொன்னதற்குக் காரணம்.

ஒரு கிழமையாக சச்சிதானந்தம் வீடு அமைதியாக இருந்தது.ஒரு நாள் சச்சிதானந்தம்

கதிரையில் ஊட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் போது வாசல்படியில் யாரோ வந்து நிற்பது போல நிழலாட பத்திரிகையை முகத்திலிருந்து விலத்திப் பார்க்க அர்ச்சணா அங்கே படியிலேயே தயக்கத்துடன் நிற்கிறாள்.அவள் பார்வையில் ஒரு தயக்கம் பயம் இருந்ததைக் கவனித்த சச்சிதானந்தம் வழமையான சிரிப்புடன் ‘ஏன் அங்கை நிற்கிறாய் உள்ளை வா பிள்ளை ‘ என்கிறார்.

வீட்டு விறாந்தையில் நின்றபடி பார்க்கிறாள் யாரையுமே காணவில்லை.முகத்தைத் திருப்பி சச்சிதானந்தத்தைப் பார்க்க’எல்லாரும் உள்ளைதான் இருக்கினம்’ என்றவர்’சிவகாமி’ என்கிறார்.

அறையைவிட்டு வெளியே வந்த சிவகாமி விறாந்தையில் அர்ச்சணா நிற்பதைக் கண்டதும் எதவுமே பேசாது கதிரையில் வந்து உட்காருகிறாள்.

அர்ச்சணா, சச்சிதானந்தம் வீட்டுக்கு வரும் போதெல்லாம் தானாகவே அவர்களின் அடுப்படிக்குச் சென்று உரிமையுடன் தேநீர் போட்டு எல்லாருக்கும் கொடுத்து தானும் குடிப்பாள்.அவர்களில் ஒருத்தியாக அவள் அவர்களின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.

அர்ச்சணா அடுப்படிக்குள் போனதை யாருமே தடுத்து நிறுத்தவில்லை.அடுப்படிக்குள் சிவகாமிதான் நிற்கிறாள் என நினைத்த மகேஸ்வரி அறையைவிட்டு வெளியே வந்தவாறு ‘எனக்கும் அப்பாவுக்கும் கோப்பி போடு’ என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் போனவள் அங்கே அர்ச்சணா கோப்பி போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு திகைத்துப் போகிறாள்.

அர்ச்சணா எதுவுமே பேசாது ஒரு கோப்பிக் குவளையை ‘மாமி இந்தாங்கோ’ எனக் கொடுக்க மகேஸ்வரியும் எந்தத் தயக்கமும் காட்டாது வாங்கியவள் அவளை உற்றுக் கவனிக்கிறாள்.

இரண்டு கோப்பிக் குவளையுடன் விறாந்தைக்கு வந்தவள் ‘மாமா இந்தாங்கோ’ எனக் கோப்பிக் குவளையைக் சச்சிதானத்திடம் கொடுக்கிறாள்.அவரும் எந்தத் தயக்கமும் காட்டாமல் அவள் நீட்டிய கோப்பிக் குவளையை வாங்குகிறார்.

தலையைக் குனிந்து கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியிடம் ‘இந்தா பிடி’ எனக் கோப்பிக் குவளையை நீட்ட, சிவகாமி தயக்கம் காட்ட, ‘பிடிக்கிறியா இல்லாட்டி வெளியெ நான் ஊத்தவா’ என வெருட்டும் குரலில் அர்ச்சணா கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவாறு வாங்குகிறாள்.

அமசடக்காய் ஊமல்கொட்டை மாதிரி இருந்தவளுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது என யோசித்தவாறு தாயைத் திரும்பிப் பார்க்கிறாள்.தாயும,; தங்களுடைய வீட்டில் இப்படி உரிமை எடுத்துக் கொண்டதாலோ என்னவோ எங்கள் வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்படுகிறாளோ என மகேஸ்வரி கதவு நிலையில் சாய்ந்து கோப்பி குடித்தவாறே யோசிக்கிறாள்.

அப்பொழுது சைக்கிளை விறாந்தை வெளிச் சுவரோடு சாத்திவிட்டு விறாந்தையில் ஏறிய சந்திரன் அர்ச்சணாவை அங்கு கண்டதும்’அப்பா….’ என ஏதோ சொல்ல வர எதுவுமே சொல்ல வேண்டாம் என சந்திரனைப் பார்த்து ஆட்காட்டி விரலை அங்குமிங்கும் அசைக்கிறார்.

எதுவுமே பேசாது தன்னைத் திரும்பிப் பார்க்காது போகும் சந்திரனை கண்களை உயர்த்தி ஒரு எகத்தாளமான சிரிப்புடன் பார்க்கிறாள்.அவள் சிரிப்பில் நீதான் எனக்குப் புருசன், நான் இந்த வீட்டுக்குள் எப்போதோ மருமகளாக நுழைந்துவிட்டேன் என்ற அர்த்தம் இருந்தது.

‘இவளுக்கு இந்த துணிச்சலை யார் கொடுத்தது. அமைதியான பிள்ளையாகத்தானே வந்து போனால்.இவள் சந்திரனை மனதில் வைத்துத்தான் இந்த வீட்டில் உரிமை கொண்டாடினாளோ.பககத்து வீட்டுக்காரி அர்ச்சணாவின் தந்தை எனக்கு தூரத்து தம்பி முறைதான்.நான் அக்கா முறையென்று அவனுக்கும் தெரியும்.ஒரு வேளை வீட்டிலையிருந்து குடும்பமாக கதைக்கும் போது சந்திரன் அர்ச்சணாவிற்கு மச்சான் முறையாகும் சொல்லியிருப்பார்களோ’ என யோசித்த மகேஸ்வரி சுவரோடு சாய்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணாவைப் பார்ப்பதும் தலையைத் திருப்பி வேறு பக்கமாக பார்ப்புதுமாக இருந்தாள்.சிவகாமி பிரம்புசாய்வுக் கதிரையில் இருந்படி கடைக்கண்ணால் அர்ச்சணாவைப் பார்த்தபடி தேத்தண்ணியைக் குடித்துக் கொண்டிருந்தாள்.அறையைவிட்டு வெளியே வந்த சந்திரன் ஒரு கிழமைக்கு முந்தி எதுவுமே நடக்காதது போல சுவரோடு சாய்ந்து தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணாவைப் பார்த்ததும் மீண்டும் அறைக்குள் போய்விடுகிறான்.

ஒரு கிமைக்கு முந்திவரை அர்ச்சணா பற்றி அவன் எதையுமே நினைக்கவில்லை.ஒரு கிழமைக்கு முந்தி நடந்த சம்பவத்திற்குப் பின் அவன் மனதில் அர்ச்சணா மெதுமெதுவாக இருப்புக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

தான் வியர்த்து விறுவிறுத்து ஸ்கந்தா மைதானாத்தில் நின்ற போது ‘ வியர்வையைத் துடையுங்கள் ‘ என்று சாந்தினி கொடுத்த கை;குட்டையை இன்னும் அவன் பவுத்திரமாக வைத்திருக்கிறான்.அதை அவன் எறியவில்லை.அவன் அதை விரும்பி வைத்திருக்கிறான்.அறிமுகமே இல்லாத ஒருத்தி துணிச்சலாக நடு மைதானத்தில் வைத்து கைக்குட்டையைக் கொடுத்ததை நினைத்து இதுநாள்வரை அவளின் உயரமும் அழகும் அவன் மனதை குழப்பிக் கொண்டிருக்க, திடீரென்று ‘நான் பெரிய பிள்ளையாகும் முன்பே எனக்குக் காதல் கடிதம் தந்தவர்’ என்று எந்தப் பதட்டமும் இல்லாமல் துணிவாக பொய் சொன்ன அர்ச்சணாவின் நினைப்பை தவிர்க்க முடியாமல் அவன் தவித்தான்.இந்தக் குழப்பமான சூழ்நிலையிலும்கூட ‘கடைசியிலை என்ரை நிலைமை முருகன்ரை நிலைதானோ வள்ளி தெய்வானையாய் இதுகள் வந்திடுமோ’ நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தனது மகனின் மனதில் சாந்தினி என்றவளின் நினைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட சச்சிதானந்தம்,அர்ச்சணா வந்து போவதையும் கவனித்துக்

கொண்டுதானிருந்தார்.தங்களுடைய மகன் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பச்சிளங்குழந்தைக் குணம் கொண்டவன் என்றும் அவர் நினைக்கவில்லை.அந்தக் காலத்துப் பொடியனாக இருந்து தானும் விடாப்பிடியாக மகேஸ்வரிமீது விருப்பம் கொண்டு காதலிச்சு கல்யாணம் செய்ததை நினைத்துக் கொண்டார்.தனது மகன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பவனாகக்கூட இருக்கலாம் ஆர் கண்டது எவனெவன் எப்படி என்று நினைத்துக் கொண்டார்.

பக்கத்து வீடென்றாலும் சச்சிதானந்தமோ மகேஸ்வரியோ அடிக்கடி அங்கு போவதில்லை.மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ போய்க் கதைத்துவிட்டு வருவார்கள்.அர்ச்சணா வீட்டுக்காரர்களும் அப்படித்தான்.அர்ச்சணாவின் வீட்டைக் கடந்துதான் இவர்களின் வீட்டுக்குப் போவதால் யாராவது படலையடியில் தென்பட்டால், படலையடியில் நின்று கதைத்தவிட்டு மகேஸ்வரி போவதுண்டு.

ஆனால் அர்ச்சணா ஒவ்வொரு நாளும் சச்சிதானந்தம் வீட்டுக்கு வருவாள்.அவர்களின் வீட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டாள்.சகோதரியாக பழகுகிறானே என்று சொன்ன பொடியங்களும், அண்ணை போலப் பழகுகிறேன் என்று சொன்ன பொட்டையளும் பிறகு காதலர்களாக மாறிய கதைகள் நிறைய உண்டு.

அர்ச்சணா ஒரு கிழமைக்கு முந்தி நடந்து கொண்டதை அவளின் வீட்டுக்கு முச்சுவிடக்கூடாதென்பதை தாயும் தகப்பனும் சிவகாமிக்கு சொல்லியிருந்தார்கள்.சேற்றிலை எறிந்த கல் மாதிரி அந்த சம்பவம் சச்சிதானந்தம் வீட்டோடு அமந்து போய்விட்டது.

சுவரோடு சாய்ந்திருந்து தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணா ‘சிவகாமி வாற சனிக்கிழமை படத்திற்குப் போவம், மாமி நீங்களும் வாறியளா’ என்று அர்ச்சணா கேட்க , அவள் கேட்ட வேகத்திலேயே ‘நான் வரேலை’ என்கிறாள் மகேஸ்வரி.

ஒரு கிழமைக்கு முந்தி இவ்வளவு நடந்தபிறகும் எதுவுமே நடக்காதமாதிரி எப்படி இவளால் இருக்க முடிகிறது,நான்தான் வாய்க்காரி இடக்குமுடக்கான ஆளென்று பெயரெடுத்தவள், என்னையும் மிஞ்சி நிற்கிறாளே.இது போதாதென்று அரேபியக் குதிரைமாதிரி ஒருத்தி அண்ணைக்கு வியர்வை துடைக்கவென்று நடுமைதானத்துக்கு நடந்து கைக்குட்டை குடுத்திட்டுப்; போறாள்.அரேபியக் குதிரையாலும் இவளாலும் இனி என்னென்ன நடக்கப் பொகுதோ தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியிடம்’மறக்காதை வாற சனிக்கிழமை படத்துக்கு போறம் கேட்குதா வாயைத் திறந்து ஓம் என்று சொல்’ என்கிறாள் அர்ச்சணா.’வாறன்’ என்று மெதுவாகச் சொன்ன சிவகாமி’ அப்பா போகவா’ எனத் தகப்பனைப் பார்த்துக் கேட்க’ம்’ என்கிறார் சச்சிதானந்தம்.’என்ன மாமா போகாதை என்று சொல்வார் என்று நினைச்சியோ மாமா அப்படிச் சொல்லவே மாட்டார்’ என்று சொல்லியபடி தேத்தண்ணி குடிச்சு முடிச்ச தே;தண்ணிக் கோப்பையை வைப்பதற்காக அடுப்படியை நோக்கிப் போகிறாள் அர்ச்சணா.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.