இலங்கை

இலங்கை வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 25 லட்சம் டொலரை சுருட்டிய ‘ ஹேக்கர் ’!

வெளிநாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணையை திரும்பச் செலுத்தும் நடவடிக்கையின் போது, தற்போதைய அரசாங்கம் தெளிவான உறுதிப்படுத்தல்களைச் செய்யாமல் அதனை மேற்கொண்டமையினால், கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நமது நாட்டு நிதியிலிருந்து 2.5 மில்லியன் (USD 2.5 million) அமெரிக்க டொலர்கள் அதாவது 25 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தொகை காணாமல் போயுள்ளன. இந்த 2.5 மில்லியன் டொலரை ஒரு கணினி ஹேக்கர் (ஊடுருவல்காரர்) போலியான தகவல்களை வழங்கி கையகப்படுத்தியுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கும், திறைசேரிக்கும், மத்திய வங்கிக்கும் நமது நாட்டின் நிதி முகாமைத்துவச் செயல்முறையை சரியாக கொண்டு நடத்தும் இயலுமை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகின்றன. நமது நாட்டின் டொலர் பணத்தை ஹேக்கர்களால் போலி தகவல்கள் மற்றும் போலி உறுதிப்படுத்தல்களை முன்வைத்து கையகப்படுத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தால், நாட்டின் ஒட்டுமொத்த நிதி பாதுகாப்பே ஆபத்தில் காணப்படுகின்றன. இந்த நிதிக் கட்டமைப்பு முறைமையின் பலவீனத்தால் மற்றுமொரு தேசிய பாதுகாப்பு சார் பிரச்சினை இன்று நாட்டில் உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் (22) கதிர்காமம் கந்த விகாரை மற்றும் யோதகண்டிய ரனகேலிய உத்தகந்தர ராஜமகா விகாரைகளுக்குச் சென்று ஆசி பெற்றார். இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒரு கணினி ஹேக்கரால் நமது நாட்டின் வெளிநாட்டு கடன் தவணையை போலியான தகவல்களை வைத்து பெற முடிந்தது எங்ஙனம் என்ற பிரச்சினை இங்கு எழுந்துள்ளது. நாடாக இது பாராதூரமான ஒரு பிரச்சினையாகும். இது தெளிவானதொரு மோசடியாகும். பணம் அனுப்பும் போது, பொது கடன் முகாமைத்துவ அலுவலகம், வெளிநாட்டு மூலவளத் திணைக்களம், திறைசேரி, நிதி அமைச்சு, மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சரியான வழிமுறையையும் செயல்முறையையும் உருவாக்கவில்லையா என்ற கேள்வி இங்கு எழுந்து காணப்படுகின்றன. இது ஆபத்தானதொரு பிரச்சினையாகும். நாட்டின் நிதி நிலைத்தன்மை மற்றும் நிதி கையாள்கை முகாமைத்துவம் தொடர்பாக தற்சமயம் பிரச்சினை காணப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறுப்புக்கூறல் வழிமுறையும் விசாரணையும் அவசியமாகும். இந்த விடயத்தில் உண்மையைத் தேட வேண்டும். உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டின் திறைசேரியிலிருந்து இந்த பணம் எவ்வாறு திருடப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இந்த பணம் அனுப்புவதற்கு முன்பு சரியான உறுதிப்படுத்தல்கள் செய்யப்படாதது ஏன் என்ற பாரதூரமான பிரச்சினை இங்கு காணப்படுகின்றன. இதிலிருந்து யாராலும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. திருடனின் தாயிடமே திருடிய பொருளைப் பற்றிக் கேட்பது போன்ற வேலைகளை இதிலும் செய்யாது, பக்கசார்பில்லாத சுயாதீன விசாரணையொன்றின் மூலம் இந்த மோசடி சம்பவத்தை ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *