ஐ.நா.வின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் பெரும் பேரணி

செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரி தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் பேரணியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் இருந்து ஆரம்பமான பேரணி , கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்து , கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, பொ.ஐங்கரநேசன், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

![]()