ராஜபக்ச – ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி…

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் அவரது ஆட்சியின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பல மில்லியன் டொலர் பெறுமதியான நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, ரணில் – மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் பதவியேற்று 45 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு ஆட்சிக் காலங்களில், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டு குறித்த நிதிக் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நிதி மோசடி திட்டம்
எனினும், தற்போது இந்த நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2,300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 2013ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அந்தக் கொடுக்கல் வாங்கலின் ஊடாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி மோசடியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், குறித்த கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கை எனக் கூறி, 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை செலுத்தியதன் ஊடாக நிதிக் குற்றமொன்று இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ராஜீவ ஜயவீர கொலை
இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ராஜீவ ஜயவீர, டொரிங்டன் சதுக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்த கபில சந்திரசேனவும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியில், கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
![]()