முச்சந்தி

இனவாத சக்திகளையும் கையாண்டு காணிகளை விடுவித்தது ஈ.பி.டி.பி. – ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற வாய்ப் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், குறைந்த பட்சம் ரணில் ஆட்சியில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்ட காணிகளையாவது விடுவிக்குமாறு ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளது.

மயிலிட்டி பிரதேச மக்களினால் 21 ஆவது வாரமாக இன்று முன்னெடுக்கப்பட்ட காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

“கடந்த கால அரசாங்கங்களில் பல்வேறு இனவாத சக்திகள் அங்கம் வகித்த சூழலிலும், ஆட்சியின் பங்காளர்களாக, எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும், எமது தேசிய நல்லிணக்கத்தினையும் பயன்படுத்தி கட்டம் கட்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தோம்.

ரணில் அராங்க காலத்திலும் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக பலாலி வீதியின் கிழக்கு பக்கத்தில் உள்ள கணிசமான காணிகள் உட்பட ஏராளமான காணிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

எனினும் தொடர்ச்சியாக இடம்பெற்ற தேர்தல்கள் காரணமாக அதனை செயற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் காணிகள் எதையும் விடுவிக்காமல் பேச்சளவில் காலத்தை கடத்துகின்றனர்.

அவ்வாறு இல்லாமல் எந்தக் காணிகள் விடுவிக்கப்படும் எத்தனை ஏக்கர் விடுவிக்கப்படும்.. எப்போது விடுவிக்கப்படும் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

குறைந்த பட்சம் கடந்த ஆட்சியில் படைத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் சம்மதம் தெரிவித்த காணிகளையாவது உடனடியாக விடுவிகக்க வேண்டும்”என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *