உலகம்

” சீனாவுடன் இந்தியாவின் வர்த்தக உறவு தொடர வேண்டும்”

தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்கள் நாடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தியா தனது சொந்த தொழில் துறை மற்றும் பொருளாதாரத் திறன்களை வலுப்படுத்தும் அதே வேளையில், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றிய ஜெய்சங்கர், உருவெடுத்து வரும் புதிய உலகளாவிய சூழலானது, நாடுகள் தங்கள் பலவீனங்களைக் குறைக்கவும், பொருளாதார வாய்ப்புகளைப் பரவலாக்கவும், வெறும் ஸ்திரத்தன்மையை மட்டுமே நம்பியிருக்காமல் எதிர்பாராத தடங்கல்களுக்குத் தயாராக இருக்கவும் கோருவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய உலக அமைப்பின் மூன்று முக்கிய அம்சங்களாகப் போட்டித் தன்மை, மோதல்கள் மற்றும் பொருளாதார-மூலோபாய செல்வாக்கின் பயன்பாடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், இந்த அழுத்தங்களை எதிர்கொள்ள நான்கு அம்ச அணுகுமுறையை முன்வைத்தார்.

அபாயங்களைக் குறைத்தல், கூட்டாண்மைகள் மற்றும் மூலங்களைப் பன்முகப்படுத்துதல், சந்தைச் சீர்குலைவுகளைச் சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பான வரம்பைப் பராமரித்தல் ஆகியவையே அந்த அணுகுமுறைகளாகும்.

சீனாவுடனான உறவு குறித்துப் பேசிய ஜெய்சங்கர், சீனாவுடன் போட்டியிடுவதற்குத் தேவையான உள்நாட்டு பலத்தை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில், பெய்ஜிங்குடன் வர்த்தகத் தொடர்புகளை இந்தியா தொடர்ந்து பேண வேண்டும் என்றார்.

அதிக அளவிலான சுயசார்பு, தொழில்மயமாக்கல் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை சீனாவிடமிருந்து விலகி நிற்பதற்குப் பதிலாக, முழு நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். “நாம் உலகம் முழுவதுடனும் வர்த்தகம் செய்ய வேண்டும், அதில் சீனாவும் அடங்கும்…” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button