ஐரோப்பாவில் வறட்சியால் வெளிப்படும் போரின் சுவடுகள்

ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட வறட்சியானது மண்ணுக்குள் புதையுண்ட பழங்காலத்து இராணுவ வாகனங்களையும் ஆயுதங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
வற்றிவரும் ஆறுகள், ஜெர்மானியப் போர்க்கப்பல்கள், ஒரு வெர்மாஹ்ட் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு குண்டு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில், ஏற்பட்ட காட்டுத்தீயால் குண்டுகள் வெடிக்கும் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ நகருக்கு அருகில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில், இரண்டாம் உலகப் போர்க் காலத்து வெடிமருந்துகள் என்று கருதப்படும் ஒரு புதையல் வெளிப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள லீஜ் மாகாணத்தில், உள்ளூர் ஆளுநர் ஹெர்வே ஜமார், தீ விபத்துப் பகுதியில் புதைக்கப்பட்ட வெடிமருந்துகளைக் கையாள்வதற்காக அவசரகால சேவைகள் தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும், சமீபத்தில் ” ஆங்காங்கே வெடிப்புச் சத்தங்கள்” கேட்கப்பட்டதாகவும் கூறினார்.
அதேபோல் ருமேனியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையில், செர்பியாவின் பிரஹோவோ அருகே, டானூப் நதியின் மீது அமைந்துள்ள பெரிய அணையான ஜெர்டாப் II-க்கு முன்னால், இரண்டாம் உலகப் போர்க் கால ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்றின் சிதைவுகள் வெளிப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தின் காரணமாக “போரின் சுவடுகள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன” என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கிறிஸ்டினா கிரீன் கூறினார்.
![]()