பலதும் பத்தும்

தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்!

மும்பையைச் சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தாவின் வாழ்க்கை முழுவதும் அவரது மூன்று மகள்களைச் சுற்றியே அமைந்திருந்தது.

அவர்களை வளர்ப்பது, நல்ல கல்வி அளிப்பது, வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்வது, திருமணம் செய்து வைப்பது என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மகள்களுக்காகவே அர்ப்பணித்தார்.

குப்தாவுக்கு மூன்று மகள்கள். அவர்களில் இருவர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மூவருக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் தங்களது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் மனைவியுடன் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த குப்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார். அதன்பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் குப்தாவின் மறைவு குறித்து மும்பை, நேபாளம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்த அவரது மூன்று மகள்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகம் தகவல் தெரிவித்தது.ஆனால், நேரில் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்க தங்களுக்கு முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், தந்தையின் இறுதி நிகழ்வில் அவர்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியாமல், காணொளி அழைப்பு மூலம் தொலைவில் இருந்து பங்கேற்றனர்.முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் சிவ்சரணின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில்,

“சிவ்சரண் தனது மகள்களுடன் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்தார்.அவரிடம் ஒரு செல்போன் இருந்தது. அதன் மூலமாகவே மகள்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, மகள்களின் தொலைபேசி அழைப்புகள் குறைந்து, பின்னர் முற்றிலும் நின்றுவிட்டன. சிவ்சரணின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அவரது இறப்புக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களிடம் தெரிவித்தோம்.

அவரை வந்து பார்க்குமாறும் கூறினோம். ஆனால், அவர்களால் வர முடியவில்லை. அவர் உயிரிழந்த பிறகு, மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக தெரிவித்தோம்.

ஆனால், பயணம் செய்து வருவதற்கு தங்களுக்கு நேரமில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். பின்னர், அவர்கள் வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் இணைந்தனர்” என்றார். நேபாளத்தில் ஆசிரியராக பணியாற்றும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முறையாக நடத்துமாறு கேட்டுக்கொண்டு, அதற்காக இணையவழியில் ரூ.5,100 அனுப்பினார்.

தகனச் சடங்கு முடிந்த பிறகு, நிகழ்வின் காணொளிகளை தங்களுக்கு அனுப்புமாறும் மகள்கள் கேட்டுக்கொண்டனர். இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில், அவர்களில் ஒருவர், “இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எங்களுக்கு சாப்பிடவும் குளிக்கவும் வேண்டியுள்ளது” என்று கேட்டதாக நிர்வாகி தெரிவித்தார்.

முதலில், தந்தையின் அஸ்தியை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். ஆனால், பின்னர் சோனிபட் நகருக்கு நேரில் வர இயலாது என்று கூறிய அவர்கள், அந்த அஸ்தியை கங்கை நதியில் கரைத்துவிடுமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

வாழ்நாள் முழுவதும் மகள்களின் எதிர்காலத்திற்காக உழைத்த ஒரு தந்தையின் இறுதி பயணம், அவர்களது நேரடி வருகையின்றி முடிவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button