கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று பாதயாத்திரிகர்களுக்கு வழங்கிய மட்டு.மாநகர சபை

கதிர்காமம் புனித பாத யாத்திரிகர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை கூழங்களை அகற்றுகின்ற உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை எடுத்துச் சென்று உணவு சமைத்து கொடுத்துள்ளமை இந்து மக்களையும் மதத்தையும் அவமதிப்பதான ஒரு மிக மோசமான செயல் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
மட்டக்களப்பு மாநகர சபையின் மிக மோசமான செயல் ஒன்று நடைபெற்றுள்ளது மாநகரசபையின் கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் கதிர்காமத்துக்கு செல்லும் பாத யாத்திரிகர் களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவு பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் ஏற்றி உகந்தைக்கு எடுத்துச் சென்று உணவு சமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த செயல் புனித யாத்திரை செய்யும் இந்து மக்களை இழிவுபடுத்தும் செயலாக கருதுகின்றோம் இதை வன்மையாக கண்டிக்கின்றோம். சுகாதார பரிசோதகர்கள் எத்தனையே உணவகங்களுக்கு அனுப்பி சுத்தமாக சுகாதார முறையில் உணவகங்கள் இல்லை என தெரிவித்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கின்ற அவர்களே இன்று குப்பை கூழங்களை அகற்றுகின்ற உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்
அதேவேளை மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய தமிழரசு கட்சி ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் நிலையில் நகரிலுள்ள காந்தி பூங்கா கந்தையா பூங்கா உட்பட உள்ள அனைத்து பூங்காக்களில் குப்பை கூழங்கள் அகற்றாமல் காணப்படுவதுடன் வடிகான்கள் குப்பைகள் நிறைந்துள்ளதுடன் வீதிகளில் குவிந்து கிடக்கும் திண்ம கழிவுகளை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதால் வீதிகளால் மக்கள் பிரயாணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
எனவே அத்தியாவசிய தேவையான இந்த திண்மக் கழிவுகளை அகற்ற உங்களால் முடியாமல் விட்டால் உங்களுக்கு அந்த ஆளுமை இல்லாவிட்டால் நீங்களாகவே விலகிச் சென்று படித்த பட்டதாரிகளுக்கு உங்களுடைய இடங்களை கொடுத்தால் அவர்கள் ஆளுமையோடு இந்த மட்டு மாநகர சபையின் கீழ் உள்ள பிரதேசங்களை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பார்கள்
ஆகவே காலம் காலமாக மாநகரசபையை தமிழரசு கட்சி கைப்பற்றி எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் செய்வதும் இல்லை முறையின்படி திண்ம கழிவுகளை அகற்றுவதும் இல்லை. இவ்வாறு மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டு நேரத்தையும் காலத்தையும் கடத்திக் கொண்டு இருக்காமல் ஆளுமை மிக்கவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் இராஜிநாமா செய்வது மேலானது என்றார்.
![]()