தெய்வீக சக்தியால் நோய் குணமாக்கும் மதபோதகருக்கு டெங்கு காய்ச்சல்; சிகிச்சைக்கு வெளிநாடு பறந்தார்

தன்னிடமுள்ள தெய்வீக சக்தியால் கொடிய நோய்களைக் குணப்படுத்த முடியும் எனக் கூறி இந்நாட்டில் பிரபலமடைந்துள்ள மத போதகர் ஒருவருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் கடுமையான சமூகப் பேசும்பொருளாக மாறியிருந்த இவ ர், நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள், பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் பல நடிகர், நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார். அவர்களில் பலர் இவருடைய விசுவாசிகளாகவும் செயற்படுகின்றனர்.
தன்னிடமுள்ள தெய்வீக சக்தியால் மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறினாலும், தனக்கு ஏற்பட்ட டெங்கு நோய்க்காக இந்நாட்டின் மருத்துவமனை அமைப்பையோ அல்லது தான் கூறும் தெய்வீக சக்தியையோ பயன்படுத்தாமல், அவர் இவ்வாறு வெளிநாட்டு மருத்துவ சிகிச்சையை நாடியிருப்பது விசேட அம்சமாகும்.
இந்தப் போதகரின் திடீர் வெளிநாட்டுப் பயணம் குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் தற்போது கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
நாட்டில் நிலவும் டெங்கு தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர் இவ்வாறு நோயுற்றிருப்பதும், சிகிச்சைக்காக வெளிநாடொன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது குறித்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
![]()