இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரனினால் நினைவுப் பரிசாக வழங்கிய சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதி மிக்க கைக்கடிகாரம், சைனைட் குப்பி உள்ளிட்ட சில பொருட்களை, எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேரைக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்த வழக்கின் மேன்முறையீட்டு மனு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 நீதிமன்ற உத்தரவு

 

குறித்த வழக்கில் இரண்டாவது குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிராகக் குற்றவாளி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அத்தண்டனையை உறுதி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதவாச்சி, சியம்பலாகஸ்கட பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் ஹபிதாப் (உமர் ஹபிதாப் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவரே இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாவார்.

இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 48 குற்றச்சாட்டுகளில் 31 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2019 மே 21 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி கேமா ஸ்வர்ணதிபதி இவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் முதலில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அங்கேயும் மேல் நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். தற்போது உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்துள்ளது. குற்றவாளிக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நினைவுப் பரிசு

 

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் குற்றவாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உயர் மதிப்புமிக்க சுவிஸ் ரக கைக்கடிகாரம், சைனைடு குப்பி மற்றும் சட்டை ஆகியவற்றைத் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நிறுவப்படவுள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்காகத் தனித்தனியாக 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Court Order About Prbagarans Gift

2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா மற்றும் அவரது மனைவி வஜிரா பெரேரா உட்பட 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் அனுராதபுரத்தின் முன்னாள் பிரபல சட்டத்தரணி ஏ.சி.எஸ். ஹமீட், சட்டத்தரணி எம். அனூர்தீன், சட்டத்தரணி தனுஜா ராஜபக்ச ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், நந்த புஷ்பகுமார உட்படப் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் ஜனக பெரேரா வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button