உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் மீட்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

கிளைபர் மொரான் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்தச் சிறுவன், லா குவைரா (La Guaira) மாகாணத்தில் உள்ள இடிபாடுகளுக்கு இடையில் இருந்து ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அச்சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கராகஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வெனிசுலா அதிகாரிகள், தற்போது சிறுவனின் ஆரோக்கிய நிலைமை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது.

அறிக்கைகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளதுடன், 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாசா (NASA) அமைப்பின் ஆரம்பக்கட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, 58,000-க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிந்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அந்நாட்டின் சுகாதாரச் சேவைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதுடன், போதிய தடுப்பூசி பாதுகாப்பு இல்லாததால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.

 

சர்வதேச மீட்புக் குழுவினரும் நிவாரணப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காகத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button