இலங்கை

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் வாய் திறக்கவில்லை

அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் இணைந்து பகிரங்க கருத்தாடல்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியிருப்பதாவது:

எமது நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் பலர் தற்போது வெகுவாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மனிதனின் நிலைத்திருப்பு என்பது அவர் நம்பும் கொள்கையிலேயே தங்கியிருக்கிறது என்பது போதிய தெளிவுள்ள சகலருக்கும் தெரியும். அந்தக் கொள்கை மத ரீதியானதாகவோ அல்லது அரசியல் ரீதியானதாகவோ அல்லது வேறு ஏதேனும் விடயங்களுடன் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம். எனவே அவ்வாறான கொள்கைகள் அல்லது அதனை அடிப்படையாகக்கொண்ட கட்டமைப்புக்கள் சீர்குலையும்போது, அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் உடைந்துபோகிறார்கள்.

இன்றளவிலே எமது நாட்டில் வாழும் பௌத்தர்க்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாட்டைப் பொறுத்தமட்டில், எமது நம்பிக்கையோ அல்லது கொள்கையோ அதனுடன் தொடர்புடைய தலைவர் ஊடாகவே முன்கொண்டுசெல்லப்படுகிறது. எனவே பௌத்த மதத்தைப் பொறுத்தமட்டில், அதற்குத் தலைமை வகிப்பவர்களாக நாம் மகா சங்கத்தினரையே கருதுகிறோம். இருப்பினும் அண்மையகாலங்களில் பெரும்பாலான பௌத்த பிக்குகள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக நாம் கேள்விப்பட்டோம். அதற்கும் அப்பால் நாம் பெரிதும் கௌரவமளிக்கும் அட்டமஸ்தானாதிபதி சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அறிந்தோம். ஆனால் இதுகுறித்து எந்தவொரு அரசியல் தலைவரும் வாய் திறக்கவில்லை.

அரசியல் தலைவரோ அல்லது மதத்தலைவரோ, யாராக இருந்தாலும் தலைவர் என்பவர் மக்களுக்கு வழிகாட்டியாக செயற்படுபவர் ஆவார். இன்றைய இளைஞர்கள் முறையான வழிகாட்டல்களின்றி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர். இவை பற்றி அரசியல் தலைவர்கள் ஏன் பேசுவதில்லை? அவர்கள் தமக்குக் கிடைத்த வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை அவதானித்ததன் பின்னர், இதுகுறித்து நாட்டின் சிரேஷ்ட பிரஜை என்ற ரீதியிலும், இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையிலும் நான் பேசவேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கமைய இதுபற்றி நான் மகாசங்கத்தேரர்களுக்குக் கடிதமொன்றை எழுதினேன். குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தும் அதேவேளை, இவ்வாறான சம்பவங்களால் நாம் மதிப்பளிக்கும் பௌத்த தர்மம் சீர்குலைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதில் கேட்டுக்கொண்டேன். அத்தோடு நாட்டிலுள்ள பௌத்த சிவில் தலைவர்களை இணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்றும் நான் ஆலோசனை வழங்கினேன். அதனை நான்கு மகாசங்கங்களின் தேரர்களும் ஏற்றுக்கொண்டார்கள். எனவே நாட்டிலுள்ள சகல பௌத்தர்களும் அரசாங்கத்தின் மீதோ அல்லது வேறு தரப்புக்கள் மீதோ பழிசுமத்திவிட்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காலம், இவ்விடயம் பற்றிய கருத்தாடல்களை உருவாக்கவேண்டும். நியாயமான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button