இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய அழுத்தம் கொடுக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் கோரிக்கை

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கும் சர்வதேச அழுத்தங்களை வழங்குமாறு ஜேர்மன் துணை தூதுவர் சாரா கசல்பார்திடம் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் துணை தூதுவருக்கும், மட்டக்களப்பு ஊடக அமைய நிர்வாகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக துணை தூதுவர் கேட்டறிந்தார். மேலும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், மாவட்டத்தில் பணியாற்றும் பல ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டினர். ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், நிலையான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் ஜேர்மன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button