வவுனியா மாநகர மேயர் காண்டீபன் பதவி நீக்கம்; சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரும் நீக்கம்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உரிய விசாரணைகளின் பின்னரே குறித்த இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்ததற்காக மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை உப தவிசாளர் பதவியிலிருந்து மட்டுமன்றி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருக்கும் சூழலில், எதிர்ப்புக் குரல்களை அடக்கவும் விமர்சகர்களை தண்டிக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆளுநரின் அதிகாரங்களையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
![]()