தவமுதல்வர் சம்பந்தர்!… கவிதை…. ஜெயராம்சர்மா

சிவபாத விருதயர் செய்ததவப் பயனாலே
தவமுதல்வர் சம்பந்தர் புவியினுக்கு வந்தார்
உமையோடு சிவனுமே சேர்ந்துமே வந்து
ஊட்டிய பாலாலே உயர்ஞானம் பெற்றார்
உயர்ஞானம் பெற்றதனால் தவமுதல்வர் ஆனார்
தவமுதல்வர் ஆனதனால் உமைபிள்ளை ஆனார்
அவர்பெற்ற ஞானத்தை வழியாயாக்கி நின்று
அதனூடாய் தவமுதல்வர் நடைபயின்று நின்றார்
வைதீகக் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார்
மனமுழுக்கச் சைவத்தை தூக்கியே சுமந்தார்
அந்தணராய் பிறந்தாலும் அனைவரையும் அணைத்தார்
அரனடியார் அனைவரையும் போற்றியவர் நின்றார்

உண்ணா முலையாள் உவந்தளித்தாள் ஞானப்பால்
பண்ணாகக் கொட்டினார் பைந்தமிழில் பதிகத்தை
வண்ணத் தமிழில் கொட்டினார் வகைவகையாய்
பண்ணார்ந்த தமிழாய் பரவியதே பாரினிலே
மண்ணிலே நல்லவண்ணம் வாழலாம் என்று
நம்பிக்கை வித்தினை விதைத்தாரே சம்பந்தர்
பெண்மையைச் சம்பந்தர் பெருதுமே மதித்தார்
உண்ணா முலையம்மை ஊட்டிவிட்டா பாலாலே
சைவத்தை வளர்த்தெடுக்கத் தமிழெடுத்தார் சம்பந்தர்
அய்யராய் பிறந்தாலும் அகமுழுக்கத் தமிழானார்
தமிழ்ஞான சம்பந்தன் சைவத்தைப் பரப்புதற்கு
இறை ஞானத்தோடு இணைத்தாரே இன்தமிழை
சமணமும் பெளத்தமும் மேலோங்க முனைந்தன
சைவத்தை நடைமுறையைத் தகர்த்தெறிய வந்தன
சிவனருளால் திருஞான சம்பந்தர் வந்தார்
செம்மையுடன் சைவத்தைச் சிறந்தோங்கச் செய்தார்
சைவத்தை எதிர்த்தன பெண்களை வெறுத்தன
சங்கீதம் நடனத்தை ஒதுக்கியே வைத்தன
ஒறுத்ததை வெறுத்ததை உளங்கொள்ளா சம்பந்தர்
ஒறுத்ததை வெறுத்ததை உயர்வாக்கி நின்றார்
சமணமம் பெளத்தமதம் ஒதுக்கியதைச் சம்பந்தர்
சைவத்தின் வளர்ச்சிக்குத் தானுரமாய் ஆக்கினார்
சம்பந்தர் உத்வேகம் சம்பந்தர் புதுநோக்கு
சைவத்தை தாழவிடா தளைந்தோங்கச் செய்ததுவே
நாவுக்கு அரசரை நற்றமிழால் சம்பந்தர்
அப்பரே என்றழைத்து அன்பினைக் காட்டினார்
சம்பந்தர் அப்பர் சைவத்தைப் பரப்புதற்கு
ஊரூராய்ச் சென்றார் உளமார உழைத்தார்
இளங்கன்று சம்பந்தர் இயற்கையினை ரசித்தார்
இயற்கையிலே சம்பந்தர் இறையினையே கண்டார்
இசைஞானம் மிக்கவவராய் சம்பந்தர் மிளிர்ந்தார்
பண்ணோடு சந்தங்களை பக்குவமாய் இணைத்தார்
சந்தத்தின் தந்தையாய் சம்பந்தர் திகழுகிறார்
அருணகிரிக் காசானாய் ஆகிவிட்டார் சம்பந்தர்
சம்பந்தர் பலவகையில் பாடல்களைத் தந்தார்
தந்தவைகள் அத்தனையும் தமிழ்சைவச் சொத்தே
ஞானத் தனிமுதல்வன் நான்மறையைப் போற்றுபவன்
மேலாக சைவத்தை மேதினியில் உயர்த்தியவன்
காழியர்கோன் சம்பந்தன் கறைக்கண்டன் பிள்ளையவன்
ஆழமுடை தொண்டதனை அகமிருத்தி வைத்திடுவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()