கவிதைகள்

விசாகத் திருநாள் வேலவன் திருநாள்!…. கவிதை…. ஜெயராம்சர்மா

வரம்பெற்ற வல்லரக்கன் வழிதவறி நடந்தான்
வானவரை வதைப்பதிலே குறியாகி நின்றான்
வரமீந்த சிவனாரோ கொதித்துமே நின்றார்
வல்லரக்கன் வழிமாற வழிவகுத்தார் சிவனார்

வல்லரக்கன் எண்ணாத வழியொன்று கண்டார்
வரத்துக்கு ஏற்றதாய் வழிசமைத்தார் சிவனும்
தன்சக்தி கனற்பொறியாய் எழுந்துவிடச் செய்தார்
கனற்பொறியும் கந்தனாய் உருப்பெற்று வந்தது

அருவமும் உருவமாகி அறுமுகக் கடவுளாகி
பெருவுருப் பெற்றுவந்து பேரருள் புரிந்தநாளே
வைகாசி விசாகமாகி மாசினையகற்றும் நாளாய்
மாநிலம் மலர்ந்தாக மனமதில் எண்ணுவோமே

மாறுபட்ட நின்ற மாவரக்கர் தம்மை
மாறிவிட வைத்தான் மால்மருகன் முருகன்
வேலனவன் கையில் வேல்கொடுத்த நாளாய்
வைகாசி விசாகம் மனமெல்லாம் நிறைகிறது

ஆதியும் அந்தமுமும் இல்லா அரும்பொருள்
சோதியாய் ஆகியே சுடர்விடும் பெரும்பொருள்
வைகாசி விசாகத்தில் வல்வினை போக்கிட
கந்தனாய் வந்ததைக் கருத்தினில் இருத்துவோம்

கந்தனின் பிறப்பொடு பற்பல சம்பவம்
வைகாசி விசாகத்தில் வந்துமே இணையுது
அர்ஜ்ஜுனன் அரிய அஸ்த்திரம் பெற்றான்
நலமிகு நம்மாழ்வார் நாநிலம் பிறந்தார்

விரதம் இருப்பார் காவடி எடுப்பார்
வேலவன் சன்னதி அடியார் குவிவார்
வினைகள் அகற்றிட வேண்டியே நிற்பார்
வேலவன் வினைகளை அகன்றிட வைப்பார்

விசாகத் திருநாள் வேலவன் திருநாள்
மனவிருள் அகற்றும் மாண்புடைத் திருநாள்
பொய்யும் களவும் பொடிப் பொடியாகி
உய்யும் வகையினை உணர்த்திடும் திருநாள்

நம்பிக்கை வைத்து நாட்களைப் பார்ப்போம்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
நல்லது நடக்க நம்புவோம் இறையை
இறையை நம்பினால் எல்லாம் இன்பமே

நாளும் பொழுதும் நல்லதைச் செய்வோம்
நாளும் பொழுதும் நல்லதை நினைப்போம்
தீமை என்பதைத் தீண்டா திரும்போம்
தினமும் பொழுதும் இறையை நினைப்போம் !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button