நம்பினார் கெடுவதில்லை!… கவிதை… ஜெயராமசர்மா

நம்பிக்கை என்றால் நம்பிக்கை வேண்டும்
தும்பிக் கையானை தொழுகிறார் பலபேர்
பற்பல மதங்கள் பல்வகைத் தெய்வங்கள்
இப்புவி இருப்பதை எண்ணிட வேண்டும்
அல்லா என்கிறார் யேசு என்கின்றார்
அரியே என்கிறார் அரனே என்கிறார்
அகிலாண் டேஸ்வரி அம்பிகை என்கிறார்
நம்பிக்கை என்பது நாமமாய் பெருகுது
உண்டு என்று நம்பிக்கை வைக்கிறார்
இல்லை என்று சொல்பவர் இருக்கிறார்
உண்டா இல்லையா என்பதை நினைக்க
நம்பிக்கை எதுவெனத் தெளிந்திட வேண்டும்
பாசம் நேசம் பர்த்ததே இல்லை
அன்பு கருணை பார்த்ததே இல்லை
எல்லாம் இருக்கு என்னும் நம்பிக்கை
எல்லோர் இடத்தும் இறுக்கமாய் இருக்கு
நிறமும் இல்லை உருவும் இல்லை
கண்ணால் எவரும் கண்டதும் இல்லை
இருப்பதாய் நம்பிக்கை இறுக்கமாய் இருக்கு
விமர்சனம் வெறுப்பை வெளியிட மாட்டோம்
இவைகள் அனைத்தும் நிறைந்தது இறையே
இறையில் நம்பிக்கை தவறா சொல்வீர்
நம்பிக்கை உருவமே இறையே ஆகும்
நம்பிக்கை என்றுமே நல்லதே காட்டும்
நம்பினார் கெடுவதில்லை நம்பினார் வீழ்வதில்லை
நான்மறையும் நம்பிக்கை நல்வழியும் நம்பிக்கை
மதங்கூறும் தத்துவங்கள் மகத்தான நம்பிக்கை
மகத்தான நம்பிக்கை மாநிலத்தில் இறையாகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()