கவிதைகள்
இவ்வுலகு என்னாளும் சொர்க்கமாய் ஆகிவிடும்!… கவிதை…. ஜெயராமசர்மா

தர்மம் தலைகாக்கும் தளர்வில்லா வாழ்வுதரும்
அதர்மம் ஆடிநின்று அடங்கியே ஒடுங்கிவிடும்
நீதி நிலைதளரா நிமிர்ந்தோங்கி நின்றுவிடும்
பேதமுற்று நின்றால் பித்துமே பிடித்துவிடும்

ஓதி உணராதார் உரைத்திட்டால் பயனாகா
பயனாகா வார்த்தைகள் பதருக்கு ஒப்பாகும்
நிறைவான வார்த்தைகளை நித்தமுமே நாங்கள்
உரைத்திட்டால் உள்ளம் உயர்வாக உயர்ந்திடுமே
உயர்வான உள்ளத்தில் உயிர்த்துடிப் பிரிக்கும்
உயிர்த்துடிப் பிருந்தால் உள்ளமொளி வீசும்
உள்ளமொளி எழுந்தால் உலகமே போற்றும்
உலகமே போற்றினால் உயர்நிலையை எய்திடுவோம்
உயர்நிலை எய்திட உண்மையே துணையாகும்
உண்மையின் உருவமாய் இறைவனே இருக்கின்றான்
இறைவனைக் கண்டிட இருத்திடுவோம் உண்மையை
இவ்வுலகு என்னாளும் சொர்க்கமாய் ஆகிவிடும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()