கவிதைகள்
நாட ஏதுமுண்டோ நானிலத்தே இங்கே!…கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

நீரூற்றி நெல்லை வளர்த்த போதும்
பதராகிப் போனால் என் குற்றமா
வாலைக்குமரியும் வடிவாக நின்றால்
சோலைக் குயிலும் கூவாது போகுமா
வளமான வாழ்வும் வாசல்வரை வந்தும்
நிலையாது போனால் என்னவென்பேன்
ஓடுகின்ற மானைப் பிடிக்கச் சொன்னாள்
வாடிநின்ற மங்கையவள் வாழ்வறிவோம்
ஆடென்று எண்ணியே புல்லும் போட்டேன்
ஆடதுவோ தன்னை கறுப்பாடு என்றதே
அடையாளம் காட்டியதால் நானும் இங்கே
மடைமையை எண்ணி மாய்ந்தே போனேன்
விருப்பும் வெறுப்பும் வேறென்ற போதும்
வெறுப்பதும் விருப்பாய் மாறியதேனோ
மறுப்பதும் மறைப்பதும் மறையாது போக
துறப்பதில் இன்பம் வேறென்றறிவேன் நான்
காடுவரை செல்ல கூடுவதை எல்லாமும்
மாடல்ல யாவும் மற்றையவை என்றால்
வேடமிட்டு சென்று விதிமுடிக்கும் காலை
நாட ஏதுமுண்டோ நானிலத்தில் இங்கே!

![]()