அமெரிக்க காங்கிரசில் பெரும் விவாதம்: ஈரான் போரில் அமெரிக்க வியூகம் தோல்வி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பென்டகன் அறிக்கையின்படி, ஈரான் போர் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது)
ஈரான் மீதான போர் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ராணுவ நடவடிக்கைகள் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஈரான் நம்மை முடக்கியுள்ளனர், பதிலுக்கு நாம் அவர்களின் முற்றுகையை முடக்கியுள்ளோம். இதுதான் வெற்றியா எனக் கிண்டலாக எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளால் எழுந்த சர்ச்சை, பெரும் விவாதமாக மாறியது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுத சேவைக் குழு (House Armed Services Committee) விசாரணையின் போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் செத் மௌல்டன் (Seth Moulton) இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 29, 2026 அன்று நடைபெற்ற இந்த விசாரணையில், ஈரான் உடனான போரின் தற்போதைய நிலை மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது.
ஈரான் உடனான மோதலை ஒரு “அசாதாரண ராணுவ வெற்றி” (Astounding military success) என்று பீட் ஹெக்செத் (Pete Hegseth) வர்ணித்தார். ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் துறைமுகங்கள் மீது கடுமையான கடல்சார் முற்றுகையைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் ஹெக்செத்தின் வாதத்தை எதிர்த்த பிரதிநிதி செத் மௌல்டன், ஈரான் ஹார்முஸ் நீரிணை மூடியுள்ளதை நீங்கள் வெற்றியாகக் கருதுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அவர்கள் நம்மை முடக்கியுள்ளனர், பதிலுக்கு நாம் அவர்களின் முற்றுகையை முடக்கியுள்ளோம். இதுதான் வெற்றியா எனக் கிண்டலாக அவர் சாடினார்.
25 பில்லியன் டாலர் செலவு:
பென்டகன் அறிக்கையின்படி, இந்த ஈரான் போர் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனாலும் டிரம்ப் நிர்வாகம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை இந்த முற்றுகை தொடரும் என ஹெக்செத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதேவேளை ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீட்டினை, அமெரிக்காவின் துறைமுக முற்றுகை ஈடு செய்யுமா என்பது கேள்விக்குறியே. ஹெக்செத் இதனை ஒரு ராணுவ வெற்றியாகக் காட்டினாலும், சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அமெரிக்காவிற்குள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
ராணுவ நடவடிக்கை குழு:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் House Armed Services Committee (HASC), ராணுவ நடவடிக்கைகள் குழு போர்க்காலத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு முறையும் போர்க்காலத்தில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.

தற்போதய சூழ்நிலையில் ஈரான் மீதான போர் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் குழுவில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதன் போது பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம், ஆயுத அமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் குழு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சவால்கள், சைபர் பாதுகாப்பு, கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி நவீனமயமாக்கல் போன்ற தலைப்புகளில் முக்கிய விசாரணைகளை மேற்கொள்கிறது. முக்கிய அம்சங்களாக ராணுவத் துறைக்கான நிதியுதவி, கொள்கை வகுத்தல் மற்றும் மேற்பார்வையையும் செய்கிறது.
அதேவேளை மத்திய கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு, சீனா மற்றும் வட
கொரியாவின் அச்சுறுத்தல்கள், மற்றும் உக்ரைன் போரில் அமெரிக்க தலையீடு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த ராணுவ நடவடிக்கை குழுவில்
துணைக் குழுக்களும் அடங்கும். உளவுத்துறை, தயார்நிலை (Readiness), மற்றும் உத்திசார் படைகள் (Strategic Forces) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அத்துடன் விசாரணைகள் மற்றும் கூட்டங்கள் House Armed Services Committee Youtube சேனலில் நேரலையாக உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் காணலாம்.
முறுகலில் அமெரிக்க காங்கிரஸ்:
அதேவேளை அமெரிக்க காங்கிரஸில் பாரிய தர்க்கம் ஏற்பட்டது. எங்கள் மாபெரும் எதிரியே நீங்கள்தான், என சொந்த நாட்டு எம்.பி.க்களையே விளாசித் தள்ளினார் அமெரிக்க அமைச்சர் பீட் ஹெக்செத்.
ஒருபுறம் ஈரானியப் பள்ளிக்கூடம் மீது குண்டுவீசி 170 உயிர்களைப் பலிகொண்ட கொடூரம், மறுபுறம் அமெரிக்க வீரர்களின் மரணம் மற்றும் எகிறும் விலைவாசி என எதிர்க்கட்சிகளின் சரமாரிக் கேள்விகளால் நாடாளுமன்றத்தில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினர். அதற்கு பதிலடியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் எங்கள் மாபெரும் எதிரியே நீங்கள்தான் என சொந்த நாட்டு எம்.பி.க்களையே கடுமையாக விமர்சித்தார்.
ஈரான் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ‘ஹவுஸ் ஆயுதப் படைகள் குழுவின்’ விசாரணையில் ஆஜரான அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாபெரும் நேரடி மோதலில் ஈடுபட்டு உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

வளைகுடா போரின் தொடக்கத்தில் ஈரானியப் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. பழைய உளவுத் தகவல்களால் நடந்த தவறு எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த மாபெரும் சோகம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக ஹெக்செத் மழுப்பலாகப் பதிலளித்தார்.
ஈரானில் அமெரிக்க தோல்வி
இந்தத் தாக்குதலுக்கு எவ்வளவு செலவானது என்ற கேள்விக்கு, இதற்கு நான் விலையை நிர்ணயிக்க மாட்டேன் என அவர் அப்பட்டமாக மறுத்துவிட்டார். அதேவேளை ஈரான் போரில் அமெரிக்காவின் வியூகம் தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, இந்த நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் மாபெரும் எதிரியே காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில குடியரசுக் கட்சியினரின் பொறுப்பற்ற வார்த்தைகள்தான் என ஹெக்செத் கடுமையாகச் சாடினார். மேலும், போரை விமர்சித்த எம்.பி.க்களைப் பார்த்து நீங்கள் யாருக்கு ஆதரவாகச் சத்தம் போடுகிறீர்கள் என பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் குவைத்தின் ஷுய்பா துறைமுகத்தில் ஈரானிய ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், அங்கு போதிய வான்பாதுகாப்பு இல்லை எனத் தப்பிய வீரர்கள் கூறியதை எதிர்கட்சி எம்.பி. பேட்ரிக் ரையான் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்செத், நாங்கள் வீரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம், அதிகபட்சப் பாதுகாப்பையும் வழங்கினோம். ஆனால் ஏதோ ஒன்று ஊடுருவிவிட்டது. இது போரின் மாபெரும் விளைவு எனத் தனது தரப்பை நியாயப்படுத்தினார்.
அத்துடன் ஈரானின் ஹார்முஸ் நீரிணை முற்றுகையால் பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை மாபெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது குறித்து எம்.பி. ரோ கன்னா சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். டிரம்பிற்கு வாக்களித்த மக்களுக்கு இது “மாபெரும் துரோகம்” என அவர் குற்றஞ்சாட்டினார். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத ஹெக்செத், ஈரானிய அணுவாயுதத்தின் விலை என்னவென்று சொல்லுங்கள் என எதிர் கேள்வியைக் கேட்டுத் திசைதிருப்பினார். மேலும், இந்தப் போரில் அமெரிக்கா முற்றிலும் வெற்றி பெறுகிறது எனவும் அவர் கடுந் தொனியில் கூறினார்.
![]()