சஹ்ரானை சிக்க வைத்து விட்டுத் தப்பிக்க முயற்சி; பிரதான சூத்திரதாரிகள் இப்போதும் உயிருடன்!; அந்தப் பெரும் சக்தியை கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறார் நளின்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வெள்ளையடித்து அனைத்தையும் சஹ்ரான் மீது சுமத்தி பிரதான சூத்திரதாரிகளை தப்பிக்க வைக்க முயற்சிக்கப்படுகின்றது. அவ்வாறு எவராலும் தப்பிக்க முடியாது. பிரதான சூத்திரதாரி மற்றும் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவின் புத்தகம் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே நளின் பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைத்துக்கொண்டு 2020ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தோலில் வைத்துக்கொண்டு பயணித்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்தவர்களே அவர்கள். அவ்விடத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள், சிறிய சூத்திரதாரிகள் இருந்தனர். அன்று தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது இனவாத பாதையை கையில் எடுக்க முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும் அந்த தாக்குதலை சஹ்ரான் மீது சுமத்தி தப்பிக்க முடியாது. சஹரானுக்கும் அப்பால் பாரிய பெரிய சக்தியொன்று இதன் பின்னால் இருந்தது.
நான் அப்போது சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக இருந்த போது நாலக சில்வா பயங்கரவாத ஒழிப்பு பிரிவு பணிப்பாளரான இருந்தார். அவரை சிறிசேன சிறையில் அடைத்தார். அவர் யாருடைய தேவைக்காக அதனை செய்தார் என்று தெரியும். 52 நாள் சூழ்ச்சியொன்று நடந்தது. சட்டம் ஒழுங்கு அமைச்சில் இருந்து எங்களை வெளியேற்றி அந்த அமைச்சுக்களை சிறிசேன பொறுப்பேற்றார். நாங்கள் நாலக சில்வாவுடன் நெருக்கமான பணியாற்றியவர்கள் என்பதனால் நாங்கள் அந்தப் பதவியில் இருந்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும்.
இதேவேளை புலனாய்வு அதிகாரிகள் சொனிக் சொனிக் மற்றும் அபுஹிம் தொடர்பில் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் இப்போது இந்த தாக்குதலுக்கு வெள்ளையடித்து சகலதையும் சஹரான் மீது சுமத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு தப்பிக்க முடியாது. இப்போது சலே தொடர்பில் கூறினாலும் பிரதான சூத்திரதாரியொருவர் இருக்கின்றார். இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பிரதான சூத்திரதாரி என்று எங்களால் கூற முடியாது. அவர் யார் என்பதனை கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்நிலையில் அரசாங்கம் சலே மீது சுமத்த முற்படுகையில், மற்றைய தரப்பு ஷானி நோக்கியும் ரவியை நோக்கியும் விரல் நீட்டுகின்றனர். இது உதைப்பந்து போன்று மாறியுள்ளது. இதற்கு நாங்கள் இணங்கவில்லை. இதன் பின்னால் பெரும் சக்தியொன்று இருந்தது என்பதனை நாங்கள் அறிவோம். பிரதான சூத்திரதாரி உயிரிழந்த சஹ்ரான் அல்ல என்பதும் தெளிவானது. இதனால் கம்மன்பிலவுக்கு விசாரணை செய்யுமளவுக்கு அறிவு கிடையாது. சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாங்கள் கூறினோம். இதனால் சஹரானின் தாக்குதலின் பின்னர் இனவாதக் கூட்டம் அதனை தலையில் வைத்துக்கொண்டு பயணித்ததை போன்று மீண்டும் இனவாத வேட்டையை தலையில் வைத்துக்கொண்டு ஆட்சியை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். இதற்கு நாங்கள் ஒருபோதும் இணங்க மாட்டோம் என்றார்.
![]()