மூதாட்டியை அச்சுறுத்திய ரோபோவை கைது செய்த பொலிஸார்

மூதாட்டியை அச்சுறுத்தியதாக ரோபோவை காவல் துறையினர் கைது செய்துள்ள விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோபோடிக்ஸ் துறையில் சீனா முன்னணியில் உள்ள நாடு ஆகும். சில நாட்களுக்கு முன்னர் படானே மாவட்டத்தில் உள்ள லோக் யங் ஃபா யுயென் குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் 70 வயதான மூதாட்டி ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர் தனது செல்போனை பயன்படுத்தியபடி நின்றுகொண்டிருக்க, திடீரென அவர் பின்னால் வெளிச்சத்துடன் ஒரு மனித வடிவிலான ரோபோட் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆவேசமான அவர், “நீ என் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்கிறாய்! உனக்குச் செய்ய எவ்வளவோ வேலைகள் இருக்கிறது, இதையெல்லாம் ஏன் செய்கிறாய்? உனக்கு என்ன பைத்தியமா? என ரோபோவை பார்த்து கத்த தொடங்கினார்.
தகவலறிந்த 2 காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குற்றவாளியை அழைத்து செல்வது போல் அந்த ரோபோவை அழைத்து சென்றனர்.
உடல்ரீதியாக அந்த மூதாட்டி எந்த பாதிப்பையும் சந்திக்காத போதிலும், பயத்தின் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அந்த ரோபோ இயக்குநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.
ரோபோ கைது
விசாரணையில், அந்த Unitree G1 மொடல் ரோபோவானது உள்ளூர் கல்வி மையத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர், எதிர்கால விளம்பரப் பயன்பாட்டிற்காக ரோபோவைச் சோதனை செய்து கொண்டிருந்ததாகவும், அதைத் தொலைவிலிருந்து இயக்கியதாக தெரிய வந்தது.
மேலும், மேம்பட்ட தடை தவிர்ப்பு மற்றும் ஆழம் கண்டறியும் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்த அந்த ரோபோ, மூதாட்டி நடைபாதையில் நின்றுகொண்டிருந்தாகவும், எந்த தீய நோக்கமும் இன்றி அவர் விலகும் வரை காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொது இடங்களில் ரோபோவைப் பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய காவல்துறையினர், அந்த ரோபோவை அவரிடமே திருப்பி அளித்தனர்.
இது வரலாற்றில் கைது செய்யப்பட்டுள்ள முதல் ரோபோ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரோபோ கைது செய்யப்பட்டால் அதற்கு வாதாட AI வழக்கறிஞர் வரும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
![]()