எரிபொருள் தட்டுப்பாடு பீதி- தண்ணீர் டேங்கரில் 5000 லீற்றர் டீசல் நிரப்பிய நபர்

ஒருவர் தண்ணீர் டேங்கரில் எரிபொருள் நிரப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டேங்கரில் டீசலை நிரப்பிய இந்த செயல் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படும் வதந்திகளால், பலரும் தங்கள் வணக்கங்களில் போதுமான அளவு எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், இவர் ஒரு படி மேலே சென்று 5000 லீற்றர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கரை எரிபொருள் நிலையத்திற்கு எடுத்துச்சென்று டீசலை நிரப்பியுள்ளார்.
முன்னதாக பமஞ்சாபிலும் ஒருவர், 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் டீசல் நிரப்பிய வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், 30 நாட்களுக்கு மேல் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பலர் இந்த செயலை சட்டவிரோதமானது என்றும் ஆபத்தானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் போத்தலில் கூட பெட்ரோல் வாங்க அனுமதி இல்லாதபோது, முழு டேங்கரில் எரிபொருள் எடுத்துச் செல்வது உயிருக்கு ஆபத்தானது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோலிய சட்டப்படி, அதிக அளவு எரிபொருளை சேமிக்க உரிய அனுமதி அவசியம். மேலும், தண்ணீர் டேங்கர் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களில் எரிபொருள் சேமிப்பது தீ விபத்து மற்றும் வெடிப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
எரிபொருள் குவிப்பு மற்றும் கருப்பு சந்தை விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம், வதந்திகள் எவ்வாறு பொதுமக்களில் பீதியை ஏற்படுத்தி ஆபத்தான செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
![]()