சஜித் கூறியது கீழ்மட்டக் கருத்து; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான சம்பவத்தை இனவாத, மதவாத பக்கத்திற்கு திசை திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது மிகவும் கீழ்மட்டக் கருத்து எனவும் சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு,வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சாடிய அவர் மேலும் பேசுகையில்,
திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கே சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மதங்களை அடிப்படையாகக் கொண்டு இனவாத போக்கில் போகப் போவதாக கூறியுள்ளனர். ஏதேவொரு சம்பவம் நடந்துள்ளது. பொலிஸார் அதில் தலையிட்டுள்ளதுடன், இது தொடர்பில் நீதிமன்றத்திற்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் இது நீதிமன்ற நடவடிக்கை . இதில் அரசியல் தலையீடு ஏதாவது செய்யப்பட்டுள்ளதா? அரசாங்கம் தலையிட்டு இனவாதத்தை தூண்டிய இடமெதாவது உள்ளதா?.
ஆனால் பெரிய மதப் பிரச்சினையொன்றை ஏற்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பின் பகுதியொன்றை எடுத்துவந்து பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற சரத்தை காட்டுகின்றார். நாங்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருக்கின்றோமா? இந்நிலையில் சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு இதனை வேறு பக்கத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது மிகவும் கீழ்மட்ட கருத்து . சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு இனவாத, மதவாத போக்குக்கு நாட்டை கொண்டு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.
![]()