மொட்டு வேட்பாளர்கள் இனி ‘தடை’ தாண்ட வேண்டும்; பொலிஸ் அறிக்கை கேட்கும் நாமல்

இனிவரும் தேர்தல்களின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் அவர்கள் போதைப் பொருள் மற்றும் குற்றக்கும்பல்களுடன் தொடர்பு கிடையாது என்பதனை உறுதி செய்ய பொலிஸ் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்,
கொள்கைத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நாட்டை நேசிக்கும் புதிய இளைஞர்கள் எங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். இதற்கமைய இளைஞர்களின் பிரதிநிதித்துவத்துடன் இளைஞர்களின் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நேர்மையாக எதிர்கால சந்ததியினரின் தேவைகளை புரிந்துகொண்ட இளைஞர்கள் எமது இளைஞர் அணியில் இருக்கின்றனர்.
இதேவேளை மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் கட்சியென்ற ரீதியில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனுக்களை கோரும் போது இம்முறை கட்டாயமாக போதைப் பொருள் மற்றும் ஒருங்கிணைந்த குற்றக்கும்பல்களுடன் தொடர்பில்லை என்ற பொலிஸ் அறிக்கையினை பெற்றுக்கொள்வோம் என்றார்.
![]()