தமிழ் கூத்து கலைஞரின் மரபை பிரதிபலிக்கும் ‘கூத்தாடி’ திரைப்படம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பலரும் பாராட்டும் கூத்தாடி படம் ATFIA 2025 பல விருதுகள் வென்றமை இலங்கைத் தமிழரின் சாதனையாகவே கருதப்படுகிறது. இத் திரைப்படத்தில் நடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் அனைத்தும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது)
தமிழ் மக்களின் பாரம்பரிய கலையாக விளங்கும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை,
அவற்றின் மரபைக் காப்பாற்றும் முயற்சியை, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தாக்கத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பிரதிபலிக்கும் “கூத்தாடி” திரைப்படம் தற்போது சிட்னியில் வெளியாகியுள்ளது.
வெறுமனே இது ஒரு பொழுதுபோக்கு படம் அல்ல. இது ஒரு சமூகக் கருத்துடன் கூடிய கலைச் சிந்தனையை கொண்டுள்ள படைப்பு. இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இப்படம் பல சோதனைகளை தாண்டி, பல கலைஞர்களின் கூட்டுப் படைப்பில் வெற்றிகரமாக உருவாகி இருக்கும் தமிழ்ப் படம் என்று சொல்லலாம்.
வெண்கொடி பறக்கும் கூந்தல்,
வெருகிப் பொங்கும் கோபக் கண்கள்,
வீர சூலத்தின் ஆட்டதில்,
அசுரனின் ஆட்சி சிதைந்தது. இது தீமைக்கு எதிரான நித்திய யுத்தம்,
ஒளியின் வெற்றியை உரைக்கும் காவியமே ‘கூத்தாடி’ திரைப்படம்.
கலைத்துறையில் புகழ் பெற்ற கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில்,
Azonway Pictures தயாரிப்பில் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்‘கூத்தாடி‘ திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ‘கூத்தாடி‘ திரைப்படம் சர்வதேச அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது சிட்னி திரையரங்குகளில்
வெளியாகியுள்ளது.
மரபு என்பது காலத்திற்கு ஏற்ப மாறும் சிந்தனை அல்ல. அது பழமைக்கு உயிர் புகுத்தும் சாகசம். அதனை மிக நவீனமான யுகத்தில், சிறந்த கலை வடிவமாக கொண்டு வந்திருக்கிறது “கூத்தாடி” என்ற தமிழ் திரைப்படம்.
கூத்தாடி நாயகன் செல்வின் தாஸ்:
பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தத் திரைப்படத்தில் ஈழக்கலைஞன் ‘செல்வின் தாஸ்‘ நாயகனாக இத்திரைப்படத்தில் பன்னிரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
ஈழத்தில் யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும், கதாநாயகனாக நடித்தும் வருகிறார்.
தென்னிந்தியா திரைப்பட இயக்குநர் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் உலகத் திரையரங்குகளில் எங்கும் இந்த திரைப்படம் திரையிட தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல விருதினைப் பெற்ற செல்வின் தாஸ், தாயகத்தில் தனது கல்வியையும், பாரம்பரியக் கலை
விருப்பத்தையும் வளர்த்து, பின் அவுஸ்திரேலியாவில் குடியேறி, தமிழ் கலையை உலகம் முழுவதும் பார்வையிடச் செய்யும் ஒரு படைப்பாளியாக தற்பொழுது வளர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கதைக்கள நுணுக்கம் மற்றும் பாரம்பரிய கலைத்திறனில் தனிச்சிறப்பு பெற்றவரான தென்னிந்தியாவின் கவாஸ்கர் காளியப்பன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
செப்டெம்பர் 27 ஆம் திகதி சிட்னியில் சிறப்புத் திரையிடலுடன் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது. அண்மையில் தாயகத்தில் ‘கருணை விழுதுகள்‘ அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் வைத்தியர் வல்லிபுரம் தயாபரன் மற்றும் வைத்தியர் அஞ்சலின் தயாபரன் ஆகியோர் இத்திரைப்பட முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
மலேசியாவில் பாடல் வெளியீடு:
கூத்தாடி முழு நீளத் திரைப்படத்தின் பாடல் வெளியீடு கடந்த ஜூலை மாதம் மலேசியாவில் சுமார் 2000 பேர் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. இத்திரைப்படம் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் அதன் பாடல் வெளியீடு மலேசியாவில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளதோடு குறித்த திரைப்படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றது.
மேலும் இந்த திரைப்பட கதைக்கான நடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் அனைத்தும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
பலரும் பாராட்டும் கூத்தாடி படம் ATFIA 2025 விருது வென்றமை இலங்கைத் தமிழரின் சாதனையாகவே கருதப்படுகிறது.
![]()