இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஜெனீவாவில் நீதி கோரும் நிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், அவர்கள் ஜெனீவாவில் நீதி கோரும் நிலை ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பின்னர் அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.

அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை ஒருவர், ”சூம்”தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *