பலதும் பத்தும்

நெஞ்சுவலி வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?

வாய்வு பிடிப்பு, மாரடைப்பு இரண்டுமே நெஞ்சு வலியை உண்டாக்கும். அநேக மக்களுக்கு எல்லா நெஞ்சு வலியும் இதயம் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்குமோ என்ற பயமும், கவலையும் தான் அதிகமாக இருக்கின்றது. அதேசமயம், எல்லா நெஞ்சு வலிகளும் இதயம் சம்பந்தப்பட்டது இல்லை என்று நினைத்து ஒதுக்கிவிடவும் முடியாது.

அடிக்கடி ஏப்பம் வரும், வயிற்றைப் புரட்டும், வயிறு உப்புசமாக ஊதிப்போய் இருக்கும். ஆசனவாய் வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். நெஞ்சுவலி விட்டுவிட்டு குத்துகிற மாதிரி பிடிப்பு மாதிரி இருக்கும். வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.

சிலருக்கு மார்பு பகுதி திடீரென கனமாகி மிகமிகக் கடுமையான நெஞ்சுவலி வரலாம். திடீரென வரும் மாரடைப்பு மிகுந்த சக்தியுடன் வருவதால் சில நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க நேரிடும்.

மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும். வலி மிக மிக கடுமையானதாக இருக்கும். நெஞ்சைக் கசக்கி பிழிகிற மாதிரி இருக்கும். நெஞ்சுப்பகுதியிலிருந்து இடது கை விரல்கள், இடது பக்க தாடை, தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதி முதலிய இடங்களுக்கு வலி பரவும். மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்வை, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே இருக்கும். சிலருக்கு இவற்றில் ஒருசில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம்.

கடின உடற்பயிற்சி செய்யும் போது, கடின உடல் உழைப்பு செய்யும் போது, அதிக மன அழுத்தம், மன உளைச்சலில் இருக்கும்போது மாரடைப்பு வலி வரக்கூடும்.

இருக்கும் இடத்தை உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றினால் வாய்வு உடலிலிருந்து வெளியாகி பிரச்சினை தீர வாய்ப்புண்டு. வெந்நீர், சீரக நீர் குடித்தால்கூட வாய்வு வெளியேறி வலி குறைய வாய்ப்புண்டு. இதற்குப்பிறகும் வலி போகவில்லை என்றால் அது இதயம் சம்பந்தப்பட்ட வலிதான் என்று முடிவு செய்யலாம்.

மாரடைப்பினால் நெஞ்சுவலியா, வாய்வுக் கோளாறினால் நெஞ்சுவலியா என்பதைக் கண்டுபிடிக்க இரண்டுக்கும் உண்டான அறிகுறிகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். மெத்தனமாக இருக்கக்கூடாது.

மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்களும், நுரையீரல் நோய்களும், ஆஸ்துமா, காசநோய், கொரோனா நோய், கணைய நோய், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சுருங்கிப் போதல், விலா எலும்பு விரிசல் போன்றவைகளினால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

எனவே, நெஞ்சு வலி கடுமையாக இருந்தால் இதய சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து அவசர முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button