இலங்கை

கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்; தமிழர் தாயகமெங்கும் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது.

முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது.  பின்னர் அக் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.

இந்நிலையில் இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அந்தணர் ஒன்றியத்தின் ஆலோசகர் ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு -காந்தி பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வை கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை,  மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்குபற்றியிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு முள்ளிலாய்க்கால் நினைவுக் கஞ்சியும் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழினப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்  மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் இன்று நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளடங்களாக சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button