நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஜனாதிபதி அநுரவுக்கு முழுமையான தோல்வி

இலங்கையை பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக தோல்வியடைந்துள்ளமையை அண்மைய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கல்கிசை சந்தியில் 19 வயதுடைய இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டமையை சுட்டிக்காட்டி, கடந்த சில மாதங்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடந்தன என்பது எனக்கு நினைவில் இல்லை. இலங்கையை ஜனாதிபதி பாதுகாப்பாக வைத்திருப்பதில் முழு தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 42 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், அதனுடன் தொடர்புடைய 25 இறப்புகளும் பதிவாகியுள்ளமை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக துப்பாக்கி ஏந்தியவர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வதும் தாக்குதல்களை நடத்திவிட்டு இலகுவாக தப்பிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளமை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை, போட்டி பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மீட்டியகொட, களுத்துறை – நாகொட மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சட்டம் ஒழுங்கு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் அழுத்தம் அதிகரித்து வருவதால், வலுவான நடவடிக்கைக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
![]()