பலதும் பத்தும்

பெண்ணின் துணிச்சலுக்கு நேர்ந்த சோகம்!

உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ராணுவக் காவலில் விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பெண் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான பெண் பத்திரிகையாளர் உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார். ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்கள் சந்திக்கும் துயரங்களை செய்திகளாக வழங்குவதை ரோஷ்சினா வழக்கமாக கொண்டிருந்தார்.

மிகவும் துணிச்சலான செய்தியாளரான ரோஷ்சினா, 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். அப்போது ரோஷ்சினா திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து, ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ரோஷ்சினா, மெலிடோபோல் என்ற சித்ரவதை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் மெலிடோபோல் சித்ரவதை கூடத்தில் ரோஷ்சினா, கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 757 உக்ரைன் வீரர்களின் உடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்படைக்கப்பட்டன. இதில், உடல் எண் 757, அடையாளம் தெரியாத ஆணின் உடல் என கூறி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தான், அது ரோஷ்சினா உடல் என கண்டுபிடிக்கப்பட்டது.

ரோஷ்சினாவின் உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. மேலும் மூளை, கண்கள் மற்றும் மூச்சுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்ட கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. பல மாதங்கள் ரோஷ்சினாவிற்கு உணவு வழங்கப்படவில்லை என்றும், அவர் வெறும் 30 கிலோ எடையைத் தான் கொண்டிருந்ததாகவும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளும் கூறியுள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ரஷ்ய ராணுவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போர் குற்ற சட்டத்தின் கீழ் உக்ரைன் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விக்டோரியா ரோஷ்சினாவின் புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பெண் பத்திரிகையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button