பலதும் பத்தும்

சூரிய ஒளியை வானத்துக்கே திருப்பி அனுப்பி பூமியை குளிர்விக்க பிரித்தானிய அறிவியலாளர்கள் திட்டம்

புவி வெப்பமயமாதலை எதிர்க்க பல நாடுகள் பல வழிகளில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், சூரிய ஒளியை வானத்துக்கே திருப்பி அனுப்பும் ஆய்களில் பிரித்தானியா ஈடுபட உள்ளது.

புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்காக, சூரிய ஒளியை மங்கலாக்கும் ஆய்வுகள் சிலவற்றிற்கு பிரித்தானிய அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.

வெப்பத்தைக் குறைப்பதற்காக, சூரிய ஒளியை வானத்துக்கே திருப்பி அனுப்பும் வகையில், அதாவது, வானத்துக்கே எதிரொளிக்கும் வகையில், சில விடயங்களை சோதனை முறையில் செய்து பார்க்க இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அவற்றில் ஒன்று, Stratospheric Aerosol Injection (SAI) என்பதாகும். அதாவது, வளிமண்டலத்திலுள்ள ஸ்ட்ரேட்டோஸியர் என்னும் அடுக்கினுள், நீர்த்துளிகளை ஊசி போன்ற கருவி மூலம் செலுத்துதல் என்பது இதன் பொருள்.

அப்படி நீர்த்துளிகளை செலுத்தும்போது, அவை சூரிய ஒளியை எதிரொளித்து வானத்துக்கே செலுத்துவதால், பூமிக்கு வரும் வெளிச்சமும் வெப்பமும் குறையும்.

இதேபோல, Marine Cloud Brightening (MCB) என்னும் இன்னொரு விடயமும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

அது என்னவென்றால், கப்பல்கள் மூலம் வானத்தில் கடல் உப்பு துகள்களை ஸ்பிரே செய்வதாகும்.

இதன் மூலம், அருகிலிருக்கும் மேகங்களை அதிக எதிரொளிக்கும் தன்மையுடையவையாக மாற்றி, அதன் மூலம் பூமியை சற்று குளிர்விக்கலாம்.

நடைமுறையில், கப்பல்களுக்கு மேல் காணப்படும் மேகங்கள் அதிக பிரகாசத்துடன் காணப்படுவதை கவனித்த அறிவியலாளர்களுக்கு இந்த யோசனை வந்துள்ளது.

அதேபோல, 2014ஆம் ஆண்டு, ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்தபோது, அது ஏராளம் கந்தக டை ஆக்சைடை காற்றில் உமிழ்ந்தது.

அப்போது, மேகங்கள் பிரகாசமாக மாற, பூமி குளிர்ந்துள்ளது.

இதுபோன்ற விடயங்களை கவனித்த அறிவியலாளர்கள், அவற்றையே சோதனை முறையில் செய்து, பூமியை குளிர்விக்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button