இலங்கை

யாழில் 34 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட வீதி – இராணுவத்தால் கடும் நிபந்தனைகள் விதிப்பு

இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விசேட நிபந்தனைகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன.

ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.

சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திறக்கப்பட்ட புதிய வீதியூடாக செல்வதற்கு இராணுவத்தால் விசேட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வீதி காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.

குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *