‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ யாருடையது?; பிள்ளையான்- வியாழேந்திரனுக்கு எதிராக கிளர்ந்த கண்டனம்

கடந்த 15.03.2025 அன்று முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முறையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனரென்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் மற்றும் தமிழர் முற்போக்குக் கழகத்தின் செயலாளர் ரோஸ்மன் ஆகிய இருவரும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றிய’ த்தின் அரசியல் பிரிவாகக் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகிய எனது தலைமையில் 2018 இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் பத்திரிகைச் செய்திகளும் பத்திரிகை அறிக்கைகளும் தேர்தல் பிரச்சாரத் துண்டுப் பிரசுரங்களும்கூட வெளியாகியிருந்தன.
இந்த விடயங்களெல்லாம் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறியப்பட்டவையாகவிருந்த போதிலும்கூட மேற்படிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் அதுபோல் தமிழர் முற்போக்குக் கழகத்தின் செயலாளரும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக எடுத்தாண்டுள்ளனர்.
இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம்.
மேலும், இக்கூட்டுக்கும் எனது தலைமையில் 2018 இல் உருவான ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ க்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்பதையும் பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் அறியத் தருகின்றேன்.
18.03.2025
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு.